சந்தேகத்தால் மனைவி தலை மீது கேஸ் சிலிண்டரைப் போட்டுக் கொலை செய்தவருக்கு ஆயுள்
காஞ்சீபுரம்: மனைவியின் நடத்தை மீது சந்தேகப்பட்டு தலை மீது கேஸ் சிலிண்டரைப் போட்டு கொலை செய்த நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
காஞ்சீபுரம் உலகளந்தார் பெருமாள் கோவில் மாட வீதியை சேர்ந்தவர் அண்ணாமலை (36). என்ஜினீயரான இவர் சிங்கப்பூர் உள்பட பல இடங்களில் வேலை பார்த்து உள்ளார். இவரது மனைவி புவனேஸ்வரி. 33 வயதாகிறது. இவர்களுக்கு மதுசூதனன், ஆதித்யா என்ற 2 மகன்கள் உள்ளனர்.
புவனேஸ்வரியின் நடத்தை குறித்து அண்ணாமலைக்கு சந்தேகம் வந்துள்ளது. இதனால் மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டுள்ளார். கடந்த 2009ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதியும் இதுபோல சண்டை மூண்டுள்ளது. அப்போது கோபத்தில் வீட்டில் இருந்த கேஸ் சிலிண்டரைத் தூக்கி புவனேஸ்வரி மீது வீசியுள்ளார் அண்ணாமலை. இதில் படுகாயமடைந்தார் புவனேஸ்வரி. பின்னர் ஆவேசத்தில் தனது பிறப்புறுப்பையும் அரிவாளால் வெட்டி தற்கொலைக்கு முயற்சித்தார் அண்ணாமலை.
படுகாயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் புவனேஸ்வரி மரணமடைந்தார். அண்ணாமலை உயிர் பிழைத்தார்.
இதையடுத்து அண்ணாமலையை போலீஸார்கைது செய்து வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் 2வது அமர்வு நீதிமன்றம் விசாரணை நடத்தி அண்ணாமலைக்கு ஆயுள் தண்டனையும், ரூ.1000 அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தது.