எளிதில் வேலை கிடைக்க 25,000 கல்லூரி மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி: ஜெயலலிதா உத்தரவு
சென்னை: அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 25,000 மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்க ரூ.7.5 கோடி ஒதுக்கி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
'உழைப்பே உயர்வு' என்ற முதுமொழிக்கு ஏற்ப நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வித்தாக அமைப்பவர்கள் தொழிலாளர் பெருமக்கள். தொழிலாளர்களின் உண்மையான முன்னேற்றமே நாட்டின் முழுமையான வளர்ச்சி. உற்பத்தியை மென்மேலும் பெருக்குவதற்கும், பொருளாதார வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கும், தொழிலாளர்களின் பங்கு இன்றி அமையாதது.
நம் மாநிலத்தின் தொழிலாளர்களுக்கு, மாறிவரும் புதிய தொழிற்நுட்பங்களை குறித்து உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் குறைந்த செலவில் தொழில் உற்பத்தியை அதிகரிக்க வாய்ப்பு முடியும். படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள், கல்லூரி மாணவ, மாணவியருக்கும், தொழிற்சார்ந்த திறன் எய்தும் பயிற்சி அளிக்கப்படுவதன் மூலம், மனிதவள தேவைகளை பூர்த்தி செய்ய இயலும்.
இதனை உணர்ந்து அதன் அடிப்படையில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு சங்கம் மூலம் பல்வேறு திறன் மேம்படுத்தும் பயிற்சிகளை அளிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். 15,000 படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் எய்தும் பயிற்சி அளிப்பதற்காக ரூ.6 கோடியும், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் பயிலும் 25,000 மாணவர்களுக்கு மென்திறன் பயிற்சி வழங்க ரூ.7 கோடியே 50 லட்சமும், பயிற்சி வழங்குபவர்களுக்கான பயிற்சி திட்டத்திற்காக ரூ.50 லட்சமும் அனுமதித்து தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
உயர் தொழிற்நுட்பங்களான வானுர்தி பராமரிப்பு, உற்பத்தி சார்ந்த துறை, கப்பல் துறை மற்றும் அது சார்ந்த சேவைப் பிரிவுகளில் இளைஞர்களை பயிற்றுவிக்க உலகத்தரம் வாய்ந்த ஒரு பயிற்சி மையம் தனியார் பங்களிப்புடன் அமைப்பதற்கு முதற்கட்டமாக, ரூ.25 லட்சமும் அனுமதித்து தமிழக முதல்வவர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் பயிற்சி பெறும் பயிற்சியாளர்களின் அறிவுத்திறன் மேம்பட மின்னணு பாடமுறை மற்றும் பணிச்சூழலின் மாதிரி அடிப்படையிலான பயிற்சியை அறிமுகப்படுத்த ரூ.50 லட்சம் அனுமதித்து முதல்வர் ஆணையிட்டுள்ளார்.
மேலும் திறன் பயிற்சி பெறுபவர்கள், தம்மிடையே பெருமித உணர்வைப் பெறும் வகையில், அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இருந்து தேர்ச்சி பெற்று வெளிவரும் மாணவர்களுக்கும், குறுகிய கால தொழிற்பயிற்சி பெறும் மாணவர்களுக்கும், அரசு முத்திரையுடன் கூடிய திறன் அடையாள அட்டை வழங்குவதற்காக ரூ.25 லட்சம் அனுமதித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தரமிக்க பயிற்சி அளிக்கும் நபர்களை உருவாக்கும் நோக்குடன் பயிற்றுநர் மேம்பாட்டு பயிற்சி நிறுவனம் ஒன்றை உருவாக்க, முதற்கட்டமாக ரூ.25 லட்சம் அனுமதித்தும், மாநிலத்தில் தொழிற்திறன் பெற்றவர்களின் விவரங்களை சேகரிக்கவும், பராமரிக்கவும், தமிழ்நாடு மாநில திறன் பதிவுத் தொகுப்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கு ரூ.15 லட்சம் அனுமதிக்கப்பட்டுள்ளது.
தனியார் துறையில் பதிவுதாரர்கள் பணி நியமனம் பெறுவதற்கு உதவும் வகையில், மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு வேலைவாய்ப்பு அலுவலகத்திலும், ஒரு தனியார் துறை பணி நியமன உதவி பிரிவு துவக்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
தகுதி வாய்ந்த விருப்பம் உள்ள இளைஞர்களை தேர்வு செய்ய வருகைத் தரும் தனியார் தொழில் நிறுவனங்கள் மற்றும் அதில் பங்கேற்க வருகைத் தரும் இளைஞர்களின் வசதிக்காக, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில், அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த ரூ.1 கோடியே 93 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மேற்கண்ட திட்டங்களை செயல்படுத்துவதற்கான பணியாளர்களின் ஊதியம், இந்த திட்டத்திற்கான ஆலோசகரின் ஊதியம், நிர்வாக செலவுகளுக்காக ரூ.2 கோடியே 17 லட்சமும், இத்திட்டத்தை விளம்பரப்படுத்தவும், கூட்டங்களை நடத்தவும், மனிதவள தேவையை கண்டறியவும் ரூ.70 லட்சமும் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலே குறிப்பிட்ட திட்டங்களுக்காக மொத்தம் ரூ.20 கோடியே 20 லட்சத்து 80 ஆயிரம் நிதி ஒதுக்கி முதல்வர் உத்தரவி்ட்டுள்ளார்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் மனிதவளத்தை மேம்படுத்துவதற்காக, இதில் பயிலும் பயிற்சியாளர்களுக்கு பல்வேறு தொழிற்திறன் பயிற்சி அளிக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையங்களில் பயிலும் பயிற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காகவும், அவர்களுக்கு இடையே போட்டித் திறனை மேம்படுத்துவதற்காகவும், 18 தொழிற்பிரிவுகளில் நடத்தப்பட்டு வரும் மாநில அளவிலான திறனாய்வு போட்டிகள் ஒவ்வொன்றிலும், சிறந்த பயிற்சியாளராக தேர்வு செய்யப்படுபவருக்கு, தற்போது வழங்கப்பட்டு வரும் ரொக்கப் பரிசுத் தொகையை ரூ.5,000 லிருந்து ரூ.25,000 உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் சென்னை, கோவை, தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலூர், விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் தேசிய குழந்தை தொழிலாளர் சிறப்பு பள்ளிகளில் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளில் தேர்ச்சி பெற்று தொழிற்நுட்பக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம், இளங்கலை பட்டம், பொறியியல் படிப்பு, பல் மருத்துவம், மருத்துவம் உள்ளிட்ட மேற்படிப்பை தொடர, முன்னாள் குழந்தை தொழிலாளர்களுக்கு மாதந்தோறும் வழங்கப்படும் நிதியுதவியை, ரூ.250 லிருந்து ரூ.500 ஆக உயர்த்தி படிப்பு காலம் முழுவதும் வழங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதன் மூலம் 317 பேர் பயனடைவர். இதனால் அரசுக்கு ரூ.19 லட்சத்து 2 ஆயிரம் செலவினம் ஏற்படும். அரசின் இந்த நடவடிக்கைகளால், மனிதவளம் மேம்பாடு அடைந்து, வருங்காலத்தில் திறமை வாய்ந்த தொழில் வல்லுநர்கள் உருவாவதற்கு வழிவகை ஏற்படும். இதனால் தொழில் உற்பத்தி அதிகரிக்க வாய்ப்பு ஏற்படும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.