முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு: மண் மாதிரி எடுக்கும் பணி துவக்கம்
இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்ய அணையில் 475 அடி வரை துளையிட்டு மாதிரி மண் எடுக்கும் பணி நேற்று துவங்கியது.
கடந்த 2010ம் ஆண்டு டிசம்பரில் முல்லைப் பெரியாறு அணையின் பலம் குறித்து ஆய்வு செய்யும் பணியில் நீதிபதி ஆனந்த் தலைமையிலான ஐவர் குழு களமிறங்கியது. இந்த குழுவின் ஆலோசனைப்படி கடந்த ஒரு வருடமாக அணையில் அதிர்வலைச் சோதனை, அணை பகுதியை டிஜிட்டல் கேமராவில் போட்டோ எடுத்து சோதனை, தேக்கடி ஏரியில் உள்ள மண்படிவங்கள் குறித்த சோதனை, நிலநடுக்கத்தால் அணையில் பாதிப்பு உள்ளிட்ட சோதனைகளை நிபுணர் குழுக்கள் நடத்தி முடித்தன.
நிபுணர் குழுக்களின் இறுதி சோதனையாக அணையில் துளையிட்டு மண் மாதிரி எடுக்கும் பணி நேற்று தொடங்கியது. இந்த மண் மாதிரி மூலம் அணையின் பலம் அறியும் சோதனை நடத்தப்படும்.
மகாராஷ்டிரா அரசு கட்டுப்பாட்டில் உள்ள தபோடி ஒர்க்ஸ் பொறியாளர்கள் சாங்கிலி, பிரசாந்த் மற்றும் 4 தொழில்நுட்ப பொறியாளர்கள் நேற்று அணையின் 2வது இடத்தில் உள்ள 475வது அடியில் முதலாவது துளையிடும் பணியை துவக்கினர்.
அணையின் மேற்பகுதியில் இருந்து 155 அடி ஆழம் வரை துளையிட்டு, அதில் இருந்து மண் மாதிரி எடுக்க 20 நாட்கள் ஆகலாம் என்று தெரிகிறது. மண் மாதிரி எடுக்கும் இடத்தில் தமிழக பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராஜேஷ், உதவி செயற் பொறியாளர் கல்யாணசுந்தரம், கேரள நீர்ப்பாசனத்துறை செயற்பொறியாளர் டோமி ஜார்ஜ் உள்ளிட்டோர் இருந்தனர்.
மண் மாதிரி எடுக்கும் பணியை படம் பிடிக்க சென்ற தமிழக, கேரள செய்தியாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.












Click it and Unblock the Notifications