பாளை. சிறையிலிருந்து திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் விடுதலை
நெல்லை: பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் நிபந்தனை ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார்.
திருவாரூர் மாவட்ட திமுக செயலாளர் பூண்டி கலைவாணன் மீது கொலை மிரட்டல், கொலை முயற்சி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளில் கீழ் கொரடாச்சேரி மற்றும் திருவாரூர் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 30 ம் தேதி கலைவாணன் கைது செய்யப்பட்டார். பின்பு அவரை பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் அவர் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி கலைவாணன் திண்டுக்கல் நீதிமன்றத்தில் தினமும் காலை, மாலை ஆகிய 2 வேளை ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார்.
நேற்று திருவாரூர் நீதிமன்றத்தில் ஆஜராக வாரன்ட் இருந்ததால் அவர் உடனடியாக விடுதலை செய்யப்படவில்லை. திருவாரூர் நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தினர். இந்நிலையில் அந்த நீதிமன்றமும் அவருக்கு ஜாமீன் வழங்கியதையடுத்து இன்று காலை 7 மணிக்கு அவர் விடுதலை செய்யபப்ட்டார்.












Click it and Unblock the Notifications