புயல் நிவாரணப்பணியில் அரசுக்கு ஒத்துழைப்பு– கருணாநிதி
சென்னை: புயல் நிவாரணப் பணியில் அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணியாக இருக்க வேண்டும் என்று திமுக தலைவர் கருணாநிதி கூறினார்.
தானே புயலால் சிதைந்து போன கடலூர், திருவாரூர் மாவட்டத்திலும் புதுச்சேரியிலும் இரண்டு நாட்கள் ஆய்வு மேற்கொண்ட கருணாநிதி வெள்ளிக்கிழமை காலை சென்னை திரும்பினார். அப்போது எழும்பூர் ரயில் நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது,
அரசுக்கு ஒத்துழைப்பு
நிவாரணப் பணி போன்ற காரியங்களில், எந்த அரசாக இருந்தாலும், அந்த அரசோடு ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் எதிர்க்கட்சியின் பணி என்று கருதுபவன் நான். எனவே அந்தப் பணியை முறையாகச் செய்திருக்கிறேன். நிவாரணப் பணிகளைத் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. மேலும் அந்தப் பணிகள் தொடர வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அவர் கூறினார்.
புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 2 நாள்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். என்னைப் பார்த்ததில் மக்களுக்கு ஆறுதல். பாதிக்கப்பட்ட மக்களை நேரில் பார்த்ததில் எனக்கு ஆறுதல்.
ஹெலிகாப்டர் பயணம்
பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்திக்காமல் முதல்வர் ஜெயலலிதா ஹெலிகாப்டரிலேயே ஆய்வு மேற்கொண்டார் என்ற குறைபாடு மக்கள் மத்தியில் இருக்கிறதே என்று செய்தியாளர் ஒருவர் கேட்டதற்கு, "அதைப் பற்றியெல்லாம் நான் பேச விரும்பவில்லை. அது தேவையும் இல்லை' என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications