நெல்லையில் அரசு ஊழியர், மனைவியுடன் வெட்டி கொலை - நகை, பணம் கொள்ளை
நெல்லை: நெல்லையில் நகை, பணத்திற்கு அரசு இன்ஜினியரிங் கல்லூரி பணியாளரும், அவரது மனைவியும் கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் தச்சநல்லூரை அடுத்த மேலக்கரையை சேர்ந்தவர் மணிராஜ்(48). நெல்லை அரசு இன்ஜினியரிங் கல்லூரியில் இளநிலை வரைவு அலுவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி பார்வதி(42). முக்கூடல் நகர பஞ்சாயத்து அலுவலகத்தில் பில் கலெக்டராக பணியாற்றி வந்தார். அரசு கல்லூரி வளாகத்தில் உள்ள குடியிருப்பில் தங்கி இருந்தார்.
இந்த நிலையில் கடந்த 2ம் தேதிக்கு பிறகு மணிராஜ் கல்லூரி பணிக்கு செல்லவில்லை. அவருக்கு போன் செய்து பார்த்தும், யாரும் எடுக்கவில்லை. இதனால் கல்லூரி ஊழியர்கள் நேற்று காலை, மணிராஜின் வீட்டிற்கு வந்து பார்த்தனர்.
அப்போது மணிராஜின் வீட்டில் இருந்து கடும் துர்நாற்றம் வீசியது. இதனால் அதிர்ச்சியடைந்த கல்லூரி ஊழியர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இந்த தகவல் அறிந்த மேலப்பாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை உடைத்து பார்த்தனர். அப்போது மணிராஜின் வீட்டிற்குள் அவரும், அவரது மனைவியும் கழுத்து, வயிறு உள்ளிட்ட உடலின் பல இடங்களில் வெட்டுக் காயங்களுடன் இறந்து கிடந்தனர்.
2 பேரின் உடல்களும் அழுகிய நிலையில் மீட்கப்பட்டதால், 2 பேரும் கடந்த 2ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். மேலும் பார்வதியின் காதுகள் அறுக்கப்பட்டும், கழுத்தில் வெட்டு காயங்களும் இருந்தன. பீரோ மற்றும் தம்பதியர் அணிந்திருந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன.
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். நகை, பணம் கொள்ளைக்காக இந்த இரட்டை நடந்திருக்கலாம் என்று போலீசார் சந்தேகப்படுகின்றனர்.












Click it and Unblock the Notifications