கடலூரில் தொடரும் போராட்டம்-மின்சாரமில்லை, நிவாரண உதவியில்லை-மக்கள் கொதிப்பு
கடலூர்: கடலூரில் புயல் பாதித்த பகுதிகளில் இன்னும் முழுமையான நிவாரணங்கள் வந்து சேரவில்லை. மின்சார விநியோகமும் இல்லை என்பதால் மக்கள் பெரும் கொதிப்பில் உள்ளனர். தொடர்நது போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று மட்டும் 7 இடங்களில் சாலை மறியல் நடந்தது.
கடலூர் மாவட்டத்தில் புயல் பாதித்த பகுதிகளில் நிவாரண உதவிகள் முழுமையாக வழங்கப்படாமல் கட்சி பேதம் பார்க்கப்படுவதாக மக்கள் குமுறுகின்றனர். இதனஆல் அரசு அறிவித்த முழுமையாக பாதிக்கப்பட்ட வீடுகளுக்கு ரூ.5 ஆயிரமும், பகுதியாக சேதம் அடைந்த வீடுகளுக்கு தலா ரூ.2 ஆயிரத்து 500-ம் சரிவர வழங்கப்படவில்லை என்று மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
சில இடங்களில் நிவாரண உதவிகள் வழங்குவதில் பாரபட்சம் இருப்பதாகவும், நிவாரண உதவி கிடைக்கவில்லை என்றும் கூறி பொதுமக்கள் ஆங்காங்கே சாலை மறியல் மற்றும் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
நேற்று மட்டும் கடலூரில் 7 இடங்களில் சாலை மறியல் நடந்தது. நிவாரண உதவிகளை வழங்கக் கோரியும், மின்சாரத்தை விநியோகிக்கக் கோரியும் இந்த போராட்டங்கள் நடந்தன.
கடலூர் குண்டு உப்பலவாடி உப்பனாற்று தரைப்பாலம் அருகில் நிவாரண உதவிகள் கேட்டு பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். அப்போது அந்த வழியாக வந்து கொண்டிருந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராூ போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது முழுமையாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முதலில் நிவாரண உதவிகள் வழங்கப்பட்ட பின்னர், 2-வது கட்டமாக மற்றவர்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கப்படும். எனவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு செல்லும்படி கேட்டுக்கொண்டார். இதை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
கடலூரில் 19 அமைச்சர்கள் முகாமிட்டு நிவாரணப் பணிகளை கண்காணித்து முடுக்கி விட்டு வருகின்றனர் என்று அரசு கூறுகிறது. அப்படி இருந்தும் பாரபட்சம் நடப்பதாக புகார்கள் வருவது வியப்பாக உள்ளது. அரசு இதில் தலையிட்டு நிவாரண உதவிகளில் பாரபட்சம் பார்க்காமல் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் தர வேண்டும். இல்லாவிட்டால் அரசுக்கு பெரும் அவப் பெயரும் கெட்ட பெயரும் ஏற்படும் என்றும் மக்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications