புயல் பாதித்த மக்கள் தாக்குகிறார்கள்...கடலூரில் கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்டிரைக்
கடலூர்: புயல் நிவாரண நிதியை கூடுதலாக கேட்டு கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து கடலூர் தாலுகாவில் இன்று ஒருநாள் வி.ஏ.ஓக்கள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டம் மேற்கொண்டனர். இதனால் தானே புயல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரணப் பணிகள் சுணக்கம் அடைந்தன.
கடந்த டிசம்பர் 30 ம் தேதி தானே புயல் தாக்கியதால் கடலூர் மாவட்டத்தில் இயல்புவாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பிடமும், உடமைகளும் இன்றி தவிக்கும் மக்கள் பள்ளிக்கூடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். லட்சக்கணக்கான ஏக்கர் விளைநிலங்கள் சேதமடைந்துள்ளன. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு தமிழக அரசு 2500 ரூபாய் அறிவித்துள்ளது.
அறிவிக்கப்பட்ட நிவாரணத்தொகையை விட கூடுதலாக 5000 ரூபாய் வரை நிவாரணம் வழங்கவேண்டும் என்பது பொதுமக்களின் கோரிக்கையாகும். இதனை வலியுறுத்தி ஆங்காங்கே போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர். இதில் நிவாரணத் தொகை வழங்கச் சென்ற வி.எ.ஓக்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது. கடந்த மூன்று நாட்களில் மட்டும் ஏழு வி.ஏ.ஓக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
ஒருநாள் வேலை நிறுத்தம்
கிராம நிர்வாக அதிகாரிகள் மீது தாக்குதல் நடத்தப்படுவதை கண்டித்து நேற்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டம் குறித்து கருத்து தெரிவித்த கடலூர் தாலுகா வி.ஏ.ஓ சங்கத் தலைவர் நடராஜன் கூறியதாவது,
அரசு கூறிய நிவாரணத் தொகையை மட்டுமே எங்களால் வழங்கமுடியும், கூடுதல் நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரிகளை தாக்குவது கண்டிக்கத்தக்கது என்றார்.
கடலூர் தாலுகாவைச் சேர்ந்த கிராம நிர்வாக அதிகாரிகளின் வேலைநிறுத்தம் காரணமாக நிவாரணப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் கடலூர் மாவட்டத்தில் இதுவரை 55 கோடி ரூபாய் வரை நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சித்தலைவர் அமுதவல்லி தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications