பயறு விளைச்சலை அதிகரிக்க 'பயறு அதிசயம்'-50% மானியம்: ஜெ.

வேளாண் தொழிலை முன்னேற்றப் பாதையில் எடுத்துச் செல்லும் வகையிலும், விவசாயிகள் பயனடையும் வகையிலும், பல்வேறு நவீன தொழில் நுட்பங்களை வேளாண்மை தொழிலில் புகுத்துவதற்கான முன்னேற்ற நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகின்றது.
குறிப்பாக, தமிழ்நாட்டில் பயறு வகைகள், 6 லட்சம் ஹெக்டேர் நிலத்தில் பயிரிடப்பட்டாலும், உற்பத்தி 2 லட்சம் மெட்ரிக் டன் என்ற குறைந்த அளவிலேயே உள்ளது. விவசாயிகள் பயறு வகைப் பயிர்களுக்கு ஊட்டச்சத்தோ, எவ்வித அடியுரமோ அல்லது நுண்ணூட்டமோ பயன்படுத்தாதே இதற்குக் காரணமாகும். எனவே குறைந்த அளவு நிலத்தில் அதிக அளவு பயறு வகை விளைச்சலை ஏற்படுத்த, நவீன தொழில் நுட்பத்தினை விவசாயிகளிடையே பரப்ப முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது.
பயறு அதிசயம்
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகம், பயறு வகைகளின் உற்பத்தியினை அதிகரிக்க, பயறு வகைகளுக்கு தேவையான இலை, மணி, சாம்பல் சத்துக்கள் மற்றும் இரும்பு, போரான் போன்ற நுண்ணூட்ட சத்துக்கள் மற்றும் ஆக்ஸின் என்னும் பயிர் ஊக்கி ஆகியவை அடங்கிய “பயறு அதிசயம்” என்ற பயிர் ஊக்கியை உருவாக்கியுள்ளது.
பயறு வகைப் பயிர்களில் பூப்பூக்க துவங்கும் போதும் மற்றும் காய் பிடிக்கும் நேரத்திலும் பயறு அதிசயம் தெளிப்பதினால் 10 முதல் 20 விழுக்காடு அதிக உற்பத்தியினை பெற இயலும். இப்பயிர் ஊக்கியை, உளுந்து மற்றும் பாசிப் பயிர்களுக்கு, டிஏபி கரைசலுக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
எனவே, பயறு வகைப் பயிர்களில் அதிக விளைச்சலைப் பெற, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக் கழகத்தால் உருவாக்கப்பட்ட ‘பயறு அதிசயம்’ தெளிக்கும் திட்டத்தினை முதற்கட்டமாக 1,695 கிராமங்களில் 50,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் செயல்படுத்த முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
50 சதவிகிதம் மானியம்
இப்பயிர் ஊக்கியினை பிரபலப்படுத்தும் விதமாக, ‘பயறு அதிசயம்’ விவசாயிகளுக்கு 50 சதவீத மானிய விலையில் வழங்கப்படும். இத் திட்டத்திற்கு மானியம் வழங்க 212 கோடியே 50 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications