மும்பை மாநகராட்சி தேர்தல்: காங்கிரஸுக்கு தலைவலியாக உருவெடுக்கும் பவார்
மும்பை: மேற்கு வங்க மாநில முதல்வர் மமதா பானர்ஜியை அடுத்து தற்போது காங்கிரஸுக்கு தலைவலியாக மாறியிருக்கிறார் தேசியவாத காங்கிரஸ் தலைவரும், மத்திய உணவுத் துறை அமைச்சருமான சரத் பவார்.
மும்பையில் மாநகராட்சித் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் நடக்கவிருக்கிறது. இதில் மத்திய அமைச்சர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் ஆர்வமாக உள்ளது. தற்போது மும்பை மாநகராட்சி சிவ சேனா மற்றும் பாஜக வசம் உள்ளது. இதைக் கைப்பற்ற காங்கிரஸும், தேசியவாத காங்கிரஸும் மும்முரமாக உள்ளன.
இந்நிலையில் வரும் தேர்தலில் கூட்டணி வைப்பது குறித்து தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சியினர் கூடி இன்று இறுதி முடிவு எடுக்க விருப்பதாக மகாராஷ்டிரா மாநில முதல்வர் பிரித்விராஜ் சவான் தெரிவித்துள்ளார்.
முன்னதாக நேற்று முன்தினம் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்ட சரத் பவார் பேசியதாவது, கடந்த முறை கடைசி நேரம் வரை எந்தவித உடன்பாடும் எட்டவில்லை. அதனால் இந்த முறை கூட்டணி குறித்து நாளை (நேற்று) மாலைக்குள் காங்கிரஸ் ஒரு முடிவு எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதையடுத்து தான் சவான் கூட்டணி குறித்து இன்று(10ம் தேதி) இறுதி முடிவு செய்யப்படும் என்று தெரிவித்தார்.
மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே கூறுகையில், நாங்கள் பவார் சகாபை மதிக்கிறோம். ஆனால் அவர் தனது கட்சியின் பலத்தை தெரிந்து கொண்டு பேச வேண்டும். கூட்டணி தேவையில்லை என்றால் அவரவர் வழியைப் பார்த்து போகலாம் என்றார். இதனால் கூட்டணி வருமா, இல்லையா என்பதில் இழுபறி நிலவுகிறது.
தேசியவாத காங்கிரஸ் 65 இடங்களில் போட்டியிட விரும்புகிறது. ஆனால் அதற்கு 30 இடங்கள் மட்டுமே தர காங்கிரஸ் தயாராக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications