லஞ்சம் வாங்கி கொண்டு சாதகமாக தீர்ப்பு-வருமான வரி தீர்ப்பாய உறுப்பினர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்க
டெல்லி: கொல்கத்தாவைச் சேர்ந்த ஒரு சார்ட்டட் அக்கெளண்டன்ட் நிறுவனத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு தீர்ப்புகளை வழங்கிய வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் உறுப்பினர் மீது சிபிஐ குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
வருமான வரி தொடர்பாக நிறுவனங்களுக்கு பிரச்சனை இருந்தால், இது குறித்து வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயத்திடம் முறையிடலாம். நீதிமன்றம் போன்ற இந்த அமைப்பு அதை விசாரித்து தீர்ப்பை வழங்கும். இந்தத் தீர்ப்பாயத்தில் மிக சட்ட நிபுணரும், வரிகள் துறை நிபுணரும் இடம் பெற்றிருப்பர். இவர்களைத் தேர்வு செய்வது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான குழு ஆகும். வருமான வரித்துறையின் உச்ச அதிகாரம் பெற்ற மேல்முறையீட்டு அமைப்பு இதுவாகும்.
இந் நிலையில், கொல்கத்தாவைச் சேர்ந்த எஸ்.கே.துல்சியான் அண்ட் கோ என்ற சார்ட்டட் அக்கெளண்டன்ட் நிறுவனம், கொல்கத்தா தீர்ப்பாய பெஞ்சின் உறுப்பினரான ஜுகல் கிஷோர் என்பவரை கையில் போட்டுக் கொண்டு, பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக 69 தீர்ப்புகளைப் பெற்றுத் தந்துள்ளது.
இதில் பல தீர்ப்புகளை கிஷோருக்காக துல்சியான் நிறுவனமே எழுதியும் தந்துள்ளது தான் மகா கொடுமை. வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் தனது தீர்ப்பை வெளியிடும் முன்பே அந்தத் தீர்ப்பு விவரம் அடங்கிய உத்தரவு, துல்சியான் நிறுவனத்தின் கம்ப்யூட்டர் ஹார்ட் டிஸ்குகளில் இருந்துள்ளது. இதனால், அதை துல்சியான் நிறுவனத்தினர் தான் எழுதி, கிஷோருக்குத் தந்துள்ளனர் என்று சிபிஐ கண்டறிந்துள்ளது.
2008ம் ஆண்டு ரூ. 30 லட்சம் லஞ்சப் பணத்தை துல்சியான் நிறுவனத்திடம் இருந்து வாங்கும்போது கிஷோரை கையும் களவுமான சிபிஐ பிடித்தது. இதையடுத்து இந்த விவகாரம் குறித்து கடந்த 3 வருடங்களாக விசாரணை நடத்தி வந்த சிபிஐ, கிஷோர் மீதும் துல்சியான் நிறுவனம் மீதும் இப்போது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யவுள்ளது.
கொல்கத்தாவில் மட்டுமின்றி சென்னை, மும்பை, ஹைதராபாத், புவனேஸ்வர் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய பெஞ்சுகள் 2006-08ம் ஆண்டுகளில் வெளியிட்ட தீர்ப்புகளைப் போன்ற உத்தரவுகள் அடங்கிய காப்பிகள் அடங்கிய கடிதங்களும் துல்சியான் நிறுவன கம்ப்யூட்டர்களில் இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இதனால் கொல்கத்தாவில் மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் துல்சியான் நிறுவனம் புகுந்து விளையாடி, பல்வேறு நிறுவனங்களுக்கு சாதகமாக தீர்ப்புகளைப் பெற்றுத் தந்து, அரசுக்கு பல்லாயிரம் கோடியளவுக்கு வருமான வரி இழப்பை ஏற்படுத்தியிருக்கலாம் என்று தெரிகிறது.
அரசுக்கு எவ்வளவு இழப்பு ஏற்பட்டது, இதில் தொடர்புடைய மற்ற வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாய உறுப்பினர்கள் யார் யார் என்பது குறித்து சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications