முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தலையிட முடியாது: மதுரை உயர்நீதிமன்றக் கிளை மறுப்பு
மதுரை: முல்லைப்பெரியாறு அணை விவகார வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால் உயர்நீதிமன்றம் இதில் தலையிட முடியாது என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்புக்கு மத்திய போலீசை நிறுத்த வேண்டும், அணையின் நீர்பிடிப்பு பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட வேண்டும், அணை பராமரிப்பு பணியில் ஈடுபடும் தமிழக பொறியாளர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்க வேண்டும் என ஓய்வு பெற்ற பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் விஜயகுமார், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, பொறியாளர் குடும்பங்களுக்கும், தமிழகத்தில் இருந்து கேரளா செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கும் உரிய பாதுகாப்பு அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டு, இது தொடர்பாக மத்திய அரசு மற்றும் தமிழக, கேரள அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டனர். மேலும் இந்த வழக்கு விசாரணையை ஜனவரி 23ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
இந்நிலையில், கேரள அரசின் அட்வகேட் ஜெனரல் தண்டபாணி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் திங்கட்கிழமை ஆஜராகி, ஜனவரி 23ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்ட வழக்கை முன்கூட்டியே இப்போது விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும்படி நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோரிடம் கேட்டுக் கொண்டார்.
இதையடுத்து இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. அப்போது, கேரள அரசின் சார்பில் பதில் மனுவை தண்டபாணி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக கடந்த 2006ல் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் பெரியாறு அணை விவகாரத்தில் தற்போது எந்த நிலை உள்ளதோ, அந்த நிலையே நீடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கடந்த 2009 நவம்பர் 10ம் தேதி உத்தரவிட்டது.
பின்னர் நீதிபதி ஆனந்த் தலைமையில் முழு சட்ட அதிகாரம் கொண்ட 5 பேர் கொண்ட குழுவை அமைத்து 2010 செப்டம்பர் 20ம் தேதி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த மனு இந்த கோர்ட்டின் எல்லைக்கு உட்பட்டதும் கிடையாது. அணைக்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்ற மனுவை ஏற்கனவே உச்சநீதிமன்றம் தடை செய்துள்ளது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.
தலையிட முடியாது
இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. உச்சநீதிமன்றத்தை மீறி நாங்கள் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மேலும், ஐவர் குழுவின் கீழ் இந்தப் பிரச்சினை உள்ளது. இந்த விவகாரத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். மேலும், சர்ச்சையை கிளப்ப விரும்பவில்லை. அணை விவகாரத்தில் தமிழகத்துக்கு உள்ள உரிமையை பாதுகாக்க என்ன செய்ய வேண்டும் என்பது அரசுக்கு தெரியும். இதில் கோர்ட் தலையிட முடியாது’ என்றனர்.
ஒத்திவைக்க கோரிக்கை
மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல்கள் ஸ்டாலின், நீலமேகம் ஆகியோர், கேரள அரசு மட்டுமே பதில் மனு தாக்கல் செய்துள்ளது. மத்திய அரசும், தமிழக அரசும் பதில் அளிக்க வேண்டியது உள்ளது. எனவே வழக்கை தள்ளி வைக்க வேண்டும் என்றனர். இதையடுத்து நீதிபதிகள், உங்களை கோர்ட் எச்சரிக்கிறது. பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள் என்றனர்.












Click it and Unblock the Notifications