கரூரில் நூதன முறையில் பச்சிளம் குழந்தை கடத்தல்: சில மணி நேரத்தில் மீட்ட போலீசார்
கரூர்: கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்த பெண்ணின் கைக் குழந்தையை கடத்திச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டம் தோகமலை கிருஷ்ணாபட்டி பகுதியைச் சேர்ந்தவர் முருகன். அவரது மனைவி சுமதி. அவர்களுக்கு பிறந்து 35 நாளே ஆன ஆண் குழந்தை மதுரை வீரன்.
தங்களது குடும்பம் வறுமையில் வாடுவதால் இலவச பட்டா கேட்டு கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு முருகனும், சுமதியும் தங்களது கைக்குழந்தையுடன் வந்தனர்.
அப்போது அவர்களை அணுகிய சில பெண்கள், பச்சிளம் குழந்தைத் திட்டத்தின் பேரில் கைக்குழந்தைக்கு ரூ.20,000 வரை நிதி கொடுக்கின்றனர். அதை நாங்கள் வாங்கித் தருகிறோம் என கூறி முருகனிடம் ரூ. 700 கொடுத்தனர். மேலும், ரேஷன் கார்டு மற்றும் போட்டோ கொண்டு வர வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர். இதனால் முருகன் ரேஷன் கார்டை எடுத்து வர வீட்டுக்கு சென்றார்.
அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சுமதியை அருகில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்து சென்று சாப்பாடு வாங்கிக் கொடுத்து, அவரது கைக்குழந்தையை எடைபோட்டு கொண்டு வருவதாக கூறி வாங்கி சென்றவர்கள் பல மணி நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த சுமதி, அருகிலுள்ள மாவட்ட எஸ்.பி. அலுவலகத்திற்கு சென்று புகார் செய்தார்.
உடனே குற்றவாளிகளை பிடிக்க கரூர் எஸ்.பி. நாகராஜன் உத்தரவிட்டார். இதனையடுத்து களத்தில் இறங்கிய போலீசார், சோமூர் சிவகாமி, அவரது தங்கை கலைச் செல்வி ஆகியோரை கைது செய்து குழந்தைய மீட்டனர். பின்பு மதுரைவீரனை கரூர் கலெக்டர் ஷோபனாவிடம் போலீசார் ஒப்படைத்தனர். அந்த குழந்தையை பெற்றோரிடம் நேற்றிவு கலெக்டர் ஷோபனா ஒப்படைத்தார்.
போலீசார் அதிவேகத்தில் செயல்பட்டு குழந்தையை மீட்டதால் கரூர் எஸ்.பி. நாகராஜனுக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.












Click it and Unblock the Notifications