நக்கீரன் கோபாலை கைது செய்யக் கோரி மதுரை அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார்
மதுரை: தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறான செய்திச் வெளியிட்ட நக்கீரன் வார இதழ் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி மதுரை புறநகர் மாவட்ட எஸ்.பி.யிடம் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் புகார் அளித்துள்ளனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து கடந்த சில நாட்களுக்கு முன்பு நக்கீரன் வார இதழில் அவதூறான செய்தி வெளிவந்ததாக அதிமுக தரப்பில் குற்றம் சாட்டப்படுகின்றது. மேலும் இது குறித்து நக்கீரன் ஆசிரியர் நக்கீரன் கோபால் மீது ஜாம்பஜார் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த நிலையில் நக்கீரன் கோபால் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரி மதுரை புறநகர் மாவட்ட அதிமுக சார்பில் புறநகர் மாவட்ட செயலாளர் எம்.முத்துராமலிங்கம் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் மேலூர் ஆர்.சாமி, கே.தமிழரசன், எம்.வி.கருப்பையா மற்றும் அதிமுகவினர் புறநகர் மாவட்ட எஸ்.பி. அஸ்ராகார்க்கிடம் புகார் மனு கொடுத்தனர்.
இது குறித்து மதுரை புறநகர் மாவட்ட அதிமுக செயலாளர் எம்.முத்துராமலிங்கம் எம்.எல்.ஏ. செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தமிழக மக்களை பாதுகாப்பதற்காக 24 மணிநேரமும் அயராது உழைத்து வரும் தமிழக முதல்வர் குறித்து தவறான, பொய்யான செய்தியை வெளியிட்டுள்ள மஞ்சள் பத்திரிகை நக்கீரன் வார இதழின் ஆசிரியர் மற்றும் பொறுப்பாளர்கள் அனைவரும் உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று புகார் கொடுத்து உள்ளோம். புகாரை பெற்றுக் கொண்ட எஸ்.பி. புகார் மீது உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார், என்றார்.












Click it and Unblock the Notifications