ஜன. 30ம் தேதி வரை ஜல்லிக்கட்டை நடத்த உயர்நீதிமன்றம் பச்சைக் கொடி

மேலும் போட்டிகளை வீடியோ படம் எடுத்து அந்த பதிவுகளை வருகிற 30ம் ந்தேதி தாக்கல் செய்யவேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
ஜெய்ராம் ரமேஷ் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராக இருந்தபோது, ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து 11.7.2011 அன்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது. இந்த அரசாணை நிலுவையில் இருக்கும் நிலையில் மதுரை, திருச்சி ஆகிய மாவட்டங்களில் சில இடங்களில் பல்வேறு நிபந்தனைகளுடன் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதி அளித்தனர்.
இந்நிலையில் மத்திய அரசின் ஆணையை ரத்து செய்ய வேண்டும் என்று தமிழக வீர விளையாட்டு பாதுகாப்பு குழு நிறுவனரான சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள கண்டரமாணிக்கத்தை சேர்ந்த கே.ஆர்.அம்பலத்தரசு என்பவர் உயர்நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்து இருந்தார்.
இதனிடையே சென்னையை சேர்ந்த சமூக ஆர்வலர் ராதாராஜன் என்பவர், மத்திய அரசு பிறப்பித்துள்ள அரசாணைக்கு புறம்பாக மதுரை, திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட கலெக்டர்கள் அனுமதி அளித்து இருப்பது சட்டவிரோதம் என்றும், ஜல்லிக்கட்டு நடத்த மாவட்ட ஆட்சியர்கள் அனுமதித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாக்கல் செய்து இருந்தார்.
இந்த மனுக்கள் புதன்கிழமையன்று நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தன. மனுவை விசாரித்த நீதிபதிகள் மத்திய அரசு எந்த அடிப்படையில் ஜல்லிக்கட்டுக்கு தடைவிதித்து அறிவிப்பாணை வெளியிட்டது என்று மத்திய அரசு வக்கீலும், மத்திய அரசு ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து இருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்கள் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி அளித்தது எப்படி? என்பது குறித்து மாநில அரசும் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.
பின்னர் இந்த வழக்கின் இறுதி விசாரணையை வியாழக்கிழமை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர். அதன்படி இன்று காலை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஜல்லிக்கட்டு வழக்கு விசாரணைக்கு வந்தது. வழக்கறிஞர்களின் விவாதத்திற்கு பிறகு நீதிபதிகள் சித்ரா வெங்கட்ராமன், கருப்பையா ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது:-
ஏற்கனவே திட்டமிட்டப்படி வருகிற 15ம் தேதி அவனியாபுரத்திலும், 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம்தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்திக் கொள்ளலாம். சிவகங்கை மாவட்டம் சிறாவயலிலும் ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை. ஜனவரி 30ம் தேதி வரை ஜல்லிக்கட்டு நடத்தத் தடை இல்லை.
ஜல்லிக்கட்டு நடத்தப்பட்ட விதம் தொடர்பான விரிவான அறிக்கை மற்றும் வீடியோ பதிவுகளை வருகிற 30-ந்தேதி தாக்கல் செய்யவேண்டும்.
மத்திய அரசு சாகச மிருகங்கள் பட்டியலில் காளைகளையும் சேர்த்து விளையாட்டில் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இதற்கு முன்பு மாநில அரசு இந்திய பாதுகாப்பு சட்டத்தில் சாகச மிருகங்கள் பட்டியலில் காளைகள் இடம்பெறவில்லை. மத்திய அரசின் இந்த அறிவிப்பு செல்லுமா? செல்லாதா? என்பது குறித்து ஐகோர்ட்டு பின்னர் முடிவு செய்யும்.
இந்த வழக்கு விசாரணை வருகிற 30-ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
இந்த வழக்கு விசாரணையின் போது உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு ஆட்சியர் சகாயம், சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. கருப்பையா மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர்.












Click it and Unblock the Notifications