ஜனவரி 30ம் தேதி வரை சாமியைக் கைது செய்ய உயர்நீதிமன்றம் தடை

பத்திரிகை ஒன்றில் இஸ்லாமிய பயங்கரவாதம் குறித்து சாமி கட்டுரை எழுதியிருந்தார். அதில் இந்தியாவின் நம்பர் ஒன் பிரச்சினை இஸ்லாமிய பயங்கரவாதம்தான் என்று கூறியிருந்தார்.இதையடுத்து அவர் மீது டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதையடுத்து இஸ்லாமிய பயங்கரவாதம் தொடர்பாக தான் எழுதிய கட்டுரை தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் என்னை டெல்லி போலீஸார் கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே முன்ஜாமீன் தர வேண்டும் என்று கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஜனதாக் கட்சித் தலைவரும், 2ஜி வழக்கைத் தொடர்ந்தவருமான சாமி மனு செய்தார்.
இதை விசாரித்த கோர்ட், ஜனவரி 30ம்தேதி வரை சாமியைக் கைது செய்ய இடைக்காலத் தடை விதித்தது.
சமீபத்தில் 2ஜி வழக்கை விசாரித்து வரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ப.சிதம்பரத்திற்கு எதிரான ஆவணங்களை சாமி தாக்கல் செய்தார் என்பது நினைவிருக்கலாம். மேலும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்திற்கு எதிராகவும் அவர் சாட்சியம் அளிக்கவுள்ளார்.
சாமி தாக்கல் செய்துள்ள ஆவணங்களில் ப.சிதம்பரம் நிதியமைச்சராகவும், ராசா தொலைத் தொடர்புத்துறை அமைச்சராகவும் இருந்தபோது இருவருக்கும் இடையே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு தொடர்பாக நடந்த கடிதப் பரிவர்த்தனை உள்ளிட்டவற்றை இணைத்துள்ளார். மேலும் இந்த வழக்கில் ப.சிதம்பரத்தையும் ஒரு குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என்று கோர்ட்டில் கோரிக்கை விடுத்துள்ளார் சாமி. தனது வழக்குக்கு வலு சேர்க்கும் வகையில், ஜனவரி 21ம் தேதி சிபிஐ கோர்ட்டில் வாதிடவும் உள்ளார்.
இந்த பின்னணியில்தான் அவர் முன்ஜாமீன் கோரி மனு செய்தார். அவர் தாக்கல் செய்திருந்த மனுவில் மேலும் கூறுகையில், நான் கோர்ட்டில் ஆஜராகி ப.சிதம்பரத்திற்கு எதிராக பேசி விடக் கூடாது என்பதற்காக, என்னைத் தடுக்கும் வகையில், மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் தூண்டுதலின் பேரில் டெல்லி போலீஸார் என்னைக் கைது செய்யக் கூடும் என்று இந்த விவகாரத்தில் சிதம்பரத்தின் பெயரை இழுத்து விட்டிருந்தார்.












Click it and Unblock the Notifications