ரூ.பல கோடி நிதிமோசடி - சென்னையை சேர்ந்த 3 பேர் கிருஷ்ணகிரியில் கைது
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் நிதி நிறுவனம் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்த சென்னையை சேர்ந்த 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 3 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை அம்பத்தூரை சேர்ந்தவர் கண்ணன்(35). இவரது மனைவி மீனாட்சி(33). சென்னையில் உள்ள வீகேன் என்ற நிறுவன பணியாளரான கண்ணனுக்கு, கிருஷ்ணகிரியை அடுத்த ராயக்கோட்டையை சேர்ந்த ரவிச்சந்திரன்(46) உடன் பழக்கம் ஏற்பட்டது. ரவிச்சந்திரன் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துநராக பணியாற்றி விருப்ப ஓய்வுப் பெற்றவர்.
இந்த நிலையில் வீகேன் நிறுவனம் மூடப்பட்டதால், கண்ணன் தனது குடும்பத்துடன் சென்னையில் இருந்து கிருஷ்ணகிரிக்கு இடம் பெயர்ந்தார். அதன்பிறகு ராயக்கோட்டை மேம்பாலம் அருகே, 'எலோரி லார்ட் சேவ் நியூ ஜெனரேஷன்' என்ற நிதி நிறுவனத்தை துவக்கினார். இந்நிறுவனத்தில் மனைவி மீனாட்சியும், நண்பர் ரவிச்சந்திரனும் இணைந்து பணியாற்றினர்.
பல கவர்ச்சிகரமான திட்டங்கள் அறிவிக்கப்பட்டதால், நிதி நிறுவனத்தில் பணம் முதலீடு குவிந்தது. திட்டங்களின் ஒரு ஷேருக்கு ரூ.6,500 கட்டினால், ரூ.4,500 மதிப்புள்ள எலக்ட்ரிக்கல் பொருட்கள் வழங்குவதாகவும், 2 ஆண்டுகளுக்கு பிறகு ரூ.12,500 திரும்ப அளிப்பதாகவும் விளம்பரம் செய்தார்.
கவர்ச்சிகரமான திட்டங்களை நம்பிய தர்மபுரி, கிருஷ்ணரி மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் இந்நிறுவனத்தில் பணத்தை கட்டினர். இந்த நிலையில் தர்மபுரி, பாலகோட்டை அடுத்த செங்கோடப்பட்டியை சேர்ந்த முனுசாமி, இந்நிறுவனத்தில் 100 ஷேர் கட்டினார். இவருக்கு மாதந்தோறும் ரூ.25,000 எடுத்துக் கொள்ள டெபிட் கார்டு வழங்கப்படும் என்று அந்நிறுவனம் அறிவித்து இருந்தது.
ஆனால் நிறுவனம் அளித்த டெபிட் கார்ட் மூலம் பணம் எடுக்க சென்ற முனுசாமிக்கு பணம் கிடைக்கவில்லை. இதில் சந்தேகமடைந்த முனுசாமி நேற்றுமுன்தினம் கிருஷ்ணகிரியில் இயங்கி வந்த நிதி நிறுவனத்தின் அலுவலகத்துக்கு வந்து பணத்தை திரும்ப கேட்டார்.
அப்போது அலுவலகத்தில் இருந்த கண்ணன் அங்கிருந்த பணியாளர்கள் சிலருடன் சேர்ந்து, முனுசாமியை அடித்து உதைத்தனர். தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த முனுசாமி, கிருஷ்ணகிரி எஸ்.பி. அலுவலகத்தில் இது குறித்து புகார் செய்தார்.
இது குறித்து இன்ஸ்பெக்டர் ஆசைதம்பி தலைமையிலான போலீசார் நிதி நிறுவனத்திற்கு சென்று விசாரித்தனர். அப்போது கண்ணன மற்றும் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கிருஷ்ணகிரி, தர்மபுரி, வேலூர் உள்ளி்ட்ட மாவட்டங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்களிடம் இருந்து, ரூ.பல கோடி வசூல் செய்து மோசடி செய்தது தெரிந்தது.
இதனையடுத்து நிதி நிறுவன அதிபர் கண்ணன், அவரது மனைவி மீனாட்சி, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.5 லட்சம் பணம், 3 சொகுசு கார்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டது. இது குறித்து போலீசார் மேலும் விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications