மதுரை காமராஜர் பல்கலைக் கழக பாட திட்டத்தில் இருந்து ஜோதிடம் பாடத்தை நீக்க திராவிட கழகம் கோரிக்கை
மதுரை: மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் பாடத் திட்டத்தில் இருந்து மூட நம்பிக்கையை கற்றுத்தரும் ஜோதிட பாடத்தை நீக்க கோரி, திராவிடர் கழகத்தின் சார்பில் கண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது,
ஜோஸ்யம், சோதிடம் என்பது அறிவியல் அல்ல. போலி அறிவியல் (Not Science, but only PSUDO Science) என்பது நிரூபிக்கப்பட்ட ஒன்று. ஆராய்ச்சியாளர்கள், நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகள், இந்த நாட்டைச் சேர்ந்த ஏ.பி.ஜே. அப்துல்கலாம், அமிர்த்தியா சென், ராமகிருஷ்ணன் வெங்கட்ராமன் உள்பட அனைவரது ஒருமித்த கருத்து இது.
வானவியல்(Astronomy) என்பது அறிவியலை அடிப்படையாகக் கொண்டது. ஜோஸ்யம் (Astrology) என்பது அறிவியலுக்கு மாறானது ஆகும். தந்தை பெரியார் இது ஒரு மூடநம்பிக்கை என்று விளக்கி 1938 லேயே ஜோதிடப் புரட்டு என்ற நூலை எழுதி பல லட்சக்கணக்கில் பரப்பி உள்ளார்.
தந்தை பெரியார் கருத்துக்கு நேர் எதிர்மாறான கொள்கை கொண்ட ராஜாஜி கூட, ஜோதிடம் ஒரு மூடநம்பிக்கை, தனக்கு அதில் ஈடுபாடு கிடையாது என்று கூறி எழுதியுள்ளார். அவரது சீடர் கல்கியும் கூட அதே கருத்தை கொண்டுள்ளார்.
அதுபோல பிரபல நாத்திக விஞ்ஞானியான, மனோதத்துவப் பேராசிரியர் டாக்டர் ஆப்ரகாம் கோவூர் இது குறித்து பல்வேறு மறுக்க முடியாத ஆதாரங்களை அவரது கட்டுரைகளில் விவரித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டு அறிஞர் வால்டேர் 32வது வயது வரை தான் உயிர் வாழ்வார் என்றனர் ஜோதிடர். ஆனால் வால்டேர் 84 வயது வரை வாழ்ந்தார். ஜோதிடம் உண்மையல்ல என்பதற்கு இதற்கு மேல் என்ன கூற வேண்டும்?
நாம் வாழும் இந்த 21ஆம் நூற்றாண்டு அறிவியல் உச்சத்தை எட்டிய நூற்றாண்டு, மனிதன் செவ்வாயில் குடியேறலாம் அங்கே மீத்தேன் வாயு, நீராவி உண்டு என்பதால் உயிரினம் வாழும் நிலை - அனுமானம் உண்டு என்று வானவியலாளர்கள், விண்வெளி விஞ்ஞான ஆராய்ச்சியாளர்கள் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் அறிவியலைச் சொல்லிக் கொடுத்து, மாணவர்களை, இளைஞர்களை அறியாமை இருளில் இருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு வர வேண்டிய பல்கலைக் கழகங்கள், பழைய, பாஜக காவி ஆட்சியில் கல்வியைக் காவிமயமாக்கும் திட்டத்தில் கொண்டு வந்த ஜோதிடத்தை மாணவர்களுக்குப் பாடமாக்கிப் பட்டயம், பட்டம் தருவோம் என்பது மிகவும் கொடுமையானது, கேவலமானது.
மதுரை காமராசர் பல்கலைக் கழகம் இதனைக் கொண்டு வரவிருக்கும் முடிவை துணைவேந்தர் இல்லாத (தலை இல்லாத) ஒரு தற்காலிக ஆளுமைக்குழு முடிவு எடுத்து இருப்பது கண்டனத்திற்கு உரியது.
எனவே இதனைக் கண்டித்து மதுரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் திராவிட மாணவர்கள், இளைஞர்கள் சார்பில் ஜனவரி 21ம் தேதி சனிக்கிழமை மதுரையின் முக்கிய இடத்தில் நடத்த உள்ளனர் என்று அந்த அறிக்கையி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications