பீகாரைப் போன்று உபியிலும் சோனியா, ராகுல் மண்ணைக் கவ்வுவார்கள்: கட்காரி
டெல்லி: பீகார் தேர்தலைப் போன்று உத்தர பிரதேசத்திலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடையும் என்று பாஜக தேசிய தலைவர் நிதின் கட்காரி தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசததில் 7 கட்டமாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. இதையடுத்து அங்கு அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி சார்பில் அதன் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர் ராகுல் காந்தி, பிரியங்கா ஆகியோர் பிரச்சாரம் செய்கின்றனர்.
இந்நிலையில் இது குறித்து பாஜக தலைவர் நிதின் கட்காரி கூறியதாவது,
ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் பீகார் சட்டசபை தேர்தலின்போது அங்கு பிரச்சாரம் செய்தனர். இருப்பினும் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது. அதே போன்று தான் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலிலும் காங்கிரஸ் படுதோல்வி அடையும்.
முதல்வர் வேட்பாளருக்கு ராஜ்நாத் சிங், உமா பாரதி, சூர்ய பிரதாப் சாஹி மற்றும் கல்ராஜ் மிஷ்ரா ஆகியோர் பெயர்கள் பரிசீலனையில் உள்ளன. இதில் ராஜ்நாத் சிங் முதல்வராவதை விட தேசிய அரசியலில் தான் அதிக ஆர்வமாக உள்ளார். உமா பாரதி எந்த தொகுதியில் போட்டியிடுவார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லை என்றார்.