கேரளாவில் வெந்நீர் ஊற்றிக் கொல்லப்பட்ட சாந்தவேலுவின் உடலைப் பறித்து தகனம் செய்தது போலீஸ்!
சென்னை: சபரிமலைக்குச் சென்றபோது அங்கு மலையாள டீக்கடைக்காரரால் வெந்நீர் ஊற்றப்பட்டதால் படுகாயமடைந்து பரிதாபமாக உயிரிழந்த சென்னையைச் சேர்ந்த அய்யப் பக்தர் சாந்தவேலுவின் உடலை போராட்டக்காரர்களிடமிருந்து மீட்ட போலீஸார், அவர்களே உடலை தகனம் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை திருவேற்காடை அடுத்த கோலடி, திருவேங்கடம்நகர் பகுதியை சேர்ந்தவர் சாந்தவேலு (39). சபரிமலைக்கு மாலை போட்டு ஜனவரி 8ம் தேதி இவர் சபரிமலைக்குப் போயிருந்தார். அங்கு கோட்டயத்தில் ஒரு டீக்கடைக்கு சக பக்தர்களோடு டீ சாப்பிடப் போனபோது அங்கிருந்த மலையாளி டீக்கடைக்காரருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது அந்த மலையாள டீக்கடைக்காரர் கொதிக்கும் நீரை எடுத்து சாந்தவேலுவின் மீது ஊற்றி விட்டார். மனிதாபிமானமற்ற இந்த செயலால் கை, கால்,முதுகு உள்ளிட்ட இடங்களில் தீக்காயம் ஏற்பட்டுத் துடித்தார் சாந்தவேலு. மலையாள டீக்கடைக்காரரின் இந்த மிருகத்தனமான செயலால் பரிதவித்துப் போன சாந்தவேலுவைக் காப்பாற்ற முயற்சிக்காமல் அவருடன் வந்தவர்கள் மலைக்குப் போய் விட்டனர். பின்னர் போலீஸார் சாந்தவேலுவை அங்கிருந்த மருத்துவமனையில் அனுமதித்தனர்.
தகவல் அறிந்து சென்னையிலிருந்து விரைந்து சென்ற உறவினர்கள் சாந்தவேலுவை சென்னைக்குக் கொண்டு வந்து கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார் சாந்தவேலு.
இதுதொடர்பாக திருவேற்காடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சாந்தவேலுவை தலைமை தாங்கி அழைத்துச் சென்ற குருசாமி மீதும் வழக்குப் பதிவாகியுள்ளது.
இந்த நிலையில், சாந்தவேலுவின் குடும்பத்திற்கு கேரளா அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க வேண்டும். தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு தர வேண்டும். பக்தர்கள் குழுவை அழைத்துச் சென்ற குருசாமியை கைது செய்ய வேண்டும். இந்த கோரிக்கைகள் நிறைவேறாமல், சாந்தவேலுவின் உடலை அடக்கம் செய்ய மாட்டோம் என்று கூறி, அவரது உறவினர்களும், தமிழ் ஆர்வலர்களும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இதனால் அந்தப் பகுதியில் பதற்றமும் பரபரப்பும் நிலவியது. அங்கு 200-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டனர். போலீஸ் இணை கமிஷனர் செந்தாமரைக்கண்ணன், பொன்னேரி ஆர்.டி.ஓ. கந்தசாமி ஆகியோர் சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.
சாந்தவேலுவின் உடலுக்கு நாம் தமிழர் கட்சி, ம.தி.மு.க, தே.மு.தி.க., விடுதலை சிறுத்தைகள், புரட்சி பாரதம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்தவர்கள் மற்றும் வணிகர் சங்க பேரவையினர் அஞ்சலி செலுத்தினர்.
நேற்று மாலையில் திடீரென்று சாந்தவேலுவின் உடலை தகனம் செய்ய போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை கைது செய்து முதலில் அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் போலீசார் வீட்டின் பின்பகக்கமாகச் சென்று, சாந்தவேலுவின் உடலை கைப்பற்றி அமரர் ஊர்தியில் ஏற்றிச் சென்றனர். அம்பத்தூர் மின்சார தகன எரிவாயு மேடையில், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சாந்தவேலுவின் உடல் தகனம் நடைபெற்று விட்டது.
சாந்தவேலுவுக்கு முறையாக இறுதிச் சடங்குகளைக் கூட போலீஸார் செய்ய அனுமதிக்கவில்லை. இதனால் அவரது மனைவி சித்ரா, உறவினர்கள் கதறி அழுதது அனைவரையும் சோகக் கடலில் மூழ்கடித்தது. நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் அங்கு விரைந்து சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறினார். சாந்தவேலுவின் உடலை போலீசார் வலுக்கட்டாயமாக கைப்பற்றி தகனம் செய்ததற்கு அவர் கண்டனம் தெரிவித்தார்.
இதுகுறித்து சீமான் கூறுகையில்,
ஒரு மாநிலத்திலிருந்து மற்றொரு மாநிலத்திற்கு சாமி கும்பிட சென்ற ஒருவரை அங்கிருந்தவர்கள் சுடு தண்ணீரை மேலே ஊற்றி கொலை செய்துள்ளனர். இதற்கு அந்த மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்தவர்களையும் பிணத்தை கட்டிப்பிடித்து அழுதவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகள் கூட செய்ய விடவில்லை. சாலை விபத்தில் இறந்தவர்களுக்கு கூட ரூ.1 லட்சம், 2 லட்சம் என்று அரசு உதவித் தொகை அறிவிக்கிறது. ஆனால் இதுவரை சாந்தவேலுவின் குடும்பத்தினருக்கு எந்த உதவியும் வழங்கப்படவில்லை என்றார் அவர்.












Click it and Unblock the Notifications