'இந்து முன்னணி' ராம.கோபாலனுக்கு கொலை மிரட்டல் கடிதம்-போலீஸ் கமிஷனரிடம் புகார்
இது குறித்து இந்து முன்னணி அமைப்பின் சென்னை மாநகர பொதுச் செயலாளர் ஏ.டி.இளங்கோவன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார். அதில் கூறியிருப்பதாவது:
கடந்த 18ம் தேதி சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள இந்து முன்னணி தலைமை அலுவலகத்துக்கு தபால் மூலமாக ஒரு கவர் வந்தது. இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் ராம.கோபாலன் பெயருக்கு அந்த கவர் கடிதம் வந்திருந்தது. அனுப்புனர் என்ற இடத்தில், சென்னை தியாகராய நகர் வெங்கட்நாராயணன் சாலையில் உள்ள ஒரு முகவரியுடன் அந்தக் கடிதம் வந்தது.
அந்த கவருக்குள் பால்பாயிண்ட் பேனாவால் எழுதப்பட்ட கடிதம் ஒன்று இருந்தது. அதில், ஆதார் தேசிய அடையாள அட்டை மூலம், உனது உயிருக்கு ஆபத்து நெருங்கி விட்டது. கூடிய சீக்கிரம், சென்னையில் மதக் கலவரம் வெடிக்கும், அப்போது நீயும், உன் ஜனத்தில் பலரும் சாவார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக உடனடியாக உரிய விசாரணை நடத்தி, கடிதம் எழுதிய சம்பந்தப்பட்ட நபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு கமிஷ்னர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.