2ஜி: ப.சிதம்பத்தை விசாரணையில் சேர்க்கக் கோரும் சு.சாமி மனு மீது பிப்.4-ல் தீர்ப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு நடைபெற்ற காலத்தில் நிதியமைச்சராக இருந்த ப. சிதம்பரத்தையும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரி, சாமி வழக்குத் தொடர்ந்தார்.
சாமி தாக்கல் செய்த மனுவில், சிதம்பரத்தின் ஒப்புதலுடனேயே ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் விலை நிர்ணயம் உள்ளிட்ட பல முடிவுகள் எடுக்கப்பட்டன என்றும், இதுதொடர்பாக முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவை, சிதம்ரபரம் பலமுறை சந்தித்துப் பேசியுள்ளார் என்றும் அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
மேலும் ஐ.எஸ்.ஐ. உள்ளிட்ட உளவு அமைப்புகளுடன் தொடர்பிருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகத்தால் எச்சரிக்கப்பட்டிருந்த தொலைத்தொடர்பு நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் லைசென்ஸ் வழங்கியதன் மூலம் நாட்டின் பாதுகாப்புக்கு சிதம்பரம் குந்தகம் ஏற்படுத்தியுள்ளார் என்றும் சாமி தனது மனுவில் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து இந்த வழக்கில் சிதம்பரத்திற்கு எதிரான குற்றத்தை நிரூபிக்குமாறு சாமிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜனவரி 7ம் தேதி நடந்த விசாரணையின்போது சிதம்பரத்துக்கு எதிராக மேலும் தன்னிடம் உள்ள ஆவணங்களை சாமி சமர்ப்பித்தார்.
மேலும் ப.சிதம்பரத்துக்கு ஏன் சம்மன் அனுப்ப வேண்டும் என்பது குறித்து வாதாட புதிய ஆவணங்கள் சேகரிக்க கால அவகாசமும் கோரியிருந்தார். இதனை தொடர்ந்து இன்றைய தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இதன்படி இன்று நீதிமன்றத்தில் ஆஜரான சாமி சிதம்பரத்துக்கு ஆதாரங்களை சமர்பித்து வாதாடினார்.
பின்னர் நிருபர்களிடம் சாமி கூறுகையில், 6.2 மெகாஹெர்ட்ஸ் கொண்ட 2ஜி ஸ்பெக்ட்ரம், லைசென்சுடன் இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று கூறிய முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசாவுக்கும் சிதம்பரத்துக்கும் இடையிலான ஆலோசனைக் கூட்ட முடிவுகள் குறித்த தகவலை நீதிமன்றத்திடம் சமர்பித்துள்ளேன் என்றார்.
சிதம்பரத்துக்கு எதிரான சாமியின் வாதம் இன்று காலை முடிவடைந்தையடுத்து இந்த வழக்கில் வரும் பிப்ரவரி 4ம் தேதி தீர்ப்பு வழங்குவதாக சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி அறிவித்தார்.
2ஜி ஊழல் தொடர்பாக ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்படுமா?, அவரிடமும் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிடுமா என்பது குறித்து பிப்ரவரி 4ம் தேதி வழங்கப்படும் தீர்ப்பில் தெரியவரும்.












Click it and Unblock the Notifications