புதிய மின் இணைப்பு அளிக்க ரூ.5,000 லஞ்சம் - மின்சார உதவி பொறியாளர் கைது
சென்னை: சென்னையில் புதிய மின் இணைப்பு அளிக்க, ரூ.5,000 லஞ்சம் கேட்ட மின்சார உதவி பொறியாளரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.
சென்னையை அடுத்த துரைப்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது வீட்டிற்கு புதிய மின் இணைப்பு பெறுவதற்காக மின்சார வாரியத்தில் விண்ணப்பித்து இருந்தார். ஆனால் மின் இணைப்பு கிடைப்பதற்கு தாமதமானது.
இது குறித்து மணிகண்டன் விசாரித்த போது, புதிய மின் இணைப்பு வழங்க ரூ.5,000 லஞ்சம் தருமாறு மின்சார உதவி பொறியாளர் பச்சையப்பன் கேட்டார். ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிகண்டன், இது குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ஆலோசனையின் பேரில், நேற்று மணிகண்டன், பச்சையப்பனிடம் ரூ.5,000 லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. ஜான் கிளமண்ட் தலைமையிலான போலீசார், பச்சயப்பனை கையும் களவுமாக பிடித்தனர்
இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர்.