எஸ்.எம். கிருஷ்ணாவின் கரூர் பயணம் ரத்து: எதிர்ப்பு காரணமா ?
கரூர் : மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் கரூர் பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என்ற தகவல் வெளியானதை அடுத்து தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு அவர் டெல்லி சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கரூர் அருகே உள்ள நெரூரில் புகழ் பெற்ற சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதி கோயில் உள்ளது. இக்கோவிலுக்கு பல ஆன்மீக பெரியோர்களும், பிரபல அரசியல் தலைவர்களும் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர்.
இந்த நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா சனிக்கிழமை காலை சித்தர் சதாசிவ பிரமேந்திராள் ஜீவ சமாதிக்கு வந்து தரிசனம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனால் கரூர் மாவட்டம் முழுக்க பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கிருஷ்ணாவின் வருகையை முன்னிட்டு திருச்சி போலீஸ் ஐ.ஜி.அலெக்சாண்டர் மோகன் கரூர் வந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
ஆனால் திடீரென கரூர் பயணத்தை ரத்து செய்துவிட்டு எஸ்.எம். கிருஷ்ணா டெல்லி புறப்பட்டு சென்றுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை சென்ற எஸ்.எம்.கிருஷ்ணா, தமிழக மீனவர்கள் மீதான தாக்குதலை தடுத்து நிறுத்து இலங்கையிடம் வலியுறுத்தவில்லை என்ற அதிருப்தி நிலவுகிறது.
எனவே எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தமிழ் அமைப்புகள் போராட்டம் நடத்த கூடும் என்ற தகவல் வெளியானதை அடுத்து அவர் கரூர் வராமல் சென்றுவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆயினும், நெரூர் சதாசிவ பிரம்மேந்திரர் அதிஷ்டானத்தில் வழக்கம்போல், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.












Click it and Unblock the Notifications