சுப்ரீம் கோர்ட் நீதிபதி கங்குலி 11 நாட்களில் ஓய்வு பெறுகிறார்- 2ஜி வழக்கு என்னாகும்?

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பான மூன்று வழக்குளை நீதிபதி கங்குலி மற்றும் ஜி.எஸ்.சிங்வி ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்து வருகிறது.
இந்த பெஞ்ச் முன்பு முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் ராசா தனது பதவிக்காலத்தின்போது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கிய 122 லைசென்ஸுகளை ரத்து செய்ய வேண்டுமா, இல்லையா என்ற முக்கிய வழக்கு நீதிபதி கங்குலி பெஞ்ச் முன்பு நிலுவையில் உள்ளது.
அதேபோல, சி.பி.ஐ. ஸ்பெக்ட்ரம் ஊழல் விவகாரத்தைப் பாரபட்சமின்றி விசாரிக்காது என்ற சந்தேகத்தினால், வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற மேற்பார்வையில் சிறப்பு புலனாய்வுக் குழு அமைக்கக் கோரி தாக்கல் செய்யபப்ட்ட 2வது முக்கிய வழக்கையும் இந்த பெஞ்ச்தான் விசாரித்து வருகிறது.
அதேபோல, ப.சிதம்பரம் நிதியமைச்சராக இருந்த காலகட்டத்தில் 2ஜி அலைக்கற்றைக்கு விலை நிர்ணயிக்கப்பட்டது; எனவே இந்த முறைகேடு நடந்ததில் அவருக்கும் பங்கு உண்டு என்பதால் அவரையும் விசாரணைக்கு உள்படுத்த வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி உச்ச நீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கையும் இந்த நீதிபதிகள்தான் விசாரித்து வருகின்றனர்.
மூன்று வழக்குகளிலும் வாதங்கள் முடிந்து விட்டன. தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தப் பின்னணியில்தான் கங்குலி ஓய்வு பெறவுள்ளார். அவர் ஓய்வு பெற இன்னும் 11 நாட்களே உள்ளதால் இந்த வழக்குகளில் தீர்ப்பு அளிக்கப்படுவதில் சிக்கல் ஏற்படவுள்ளது.
காரணம் புதிய நீதிபதி நியமிக்கப்படும்போது அவர் முதலிலிருந்து இந்த வழக்குளை விசாரிக்கும் நிலை ஏற்படும். அப்படி நேரிட்டால் இந்த வழக்குகள் முடிவடைய மேலும் கால தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே பிப்ரவரி 2ம் தேதிக்குள் நீதிபதி கங்குலி தலைமையிலான பெஞ்ச் தீர்ப்பை அளிக்குமா அல்லது தீர்ப்பு தள்ளிப் போகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications