கைக் குழந்தையுடன் ஈழத் தமிழ்ப் பெண் நார்வேயில் தீக்குளித்து பரிதாப மரணம்!

24 வயதான அந்தப் பெண் ஈழத்தில் உள்ள சாவகச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் நார்வேயில் தஞ்சமடைந்து வசித்து வருகிறார். இவரைப் போலவே நார்வே நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வரும் குர்திஷ் இனத்தவர் ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது.
அகதி அந்தஸ்து கேட்டு இவர் நார்வே குடியேற்றத்துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்தது. இந்த சமயத்தில்தான், யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இவரது 18 வயது சகோதரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் நார்வேயில் வசித்து வந்த இப்பெண் பெரும் சோகமும், வேதனையும் அடைந்தார்.
இந்த நிலையில் தான் வசித்து வந்த இருப்பிடத்தில் தனது கைக்குழந்தையோடு அவர் தீக்குளித்து விட்டார். படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் முதலில் அப்பெண்ணும், பின்னர் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.
இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான அகதிகள் கலந்து கொண்டனர். அதில் கலந்து கொண்ட குர்திஷ் அகதிகளான சஹாப் ஷாம்லூ மற்றும் தயே ஹோஷ்யாவ் ஆகியோர் கூறுகையில், நார்வே நாட்டின் அகதிகள் கொள்கையானது மனிதாபிமானமற்ற முறையில் உள்ளது. இதனால்தான் இதுபோன்ற மரணங்கள் ஏற்பட்டு விடுகின்றன என்று குற்றம் சாட்டினர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வழக்கறிஞர் கிறிஸ்டைன் ஆரே ஹான்ஸ் கூறுகையில், தனது தங்கை மீது இப்பெண் மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தார். அவரது மரணம் இவருக்கு மிகப் பெரிய வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது. பெரும் கவலையுடன் இருந்து வந்தார் என்றார்.












Click it and Unblock the Notifications