பூச்சி மருந்து கலந்த பாயாசம் குடித்த தாய், மகன் பலி- 4 பேருக்கு தீவிர சிகிச்சை
நெல்லை: பணகுடி அருகே பூச்சி மருந்து கலந்த பாயாசத்தை குடித்த தாய், மகன் சிகிச்சை பலனின்றி இறந்தனர். மேலும் 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பணகுடி அருகேயுள்ள முத்துராஜபுரம் தெற்கு தெருவைச் சேர்ந்தவர் முருகன். விவசாயி. அவரது மனைவி சுமதி. அவர்களுக்கு சுபாஷ், சுதீஷ் ஆகிய இரு குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை முருகனின் அண்ணன் மனைவி சாந்தி, தனது மகன் செல்வினுடன் முருகனின் வீட்டுக்கு வந்தார். அப்போது வீட்டில் பாயாசம் வைத்துக் கொண்டிருந்தனர்.
பாயாசம் வைப்பதற்கு தேவையான வெல்லம் வீட்டு அலமாரியில் இருந்து எடுத்தனர். அதன் அருகில் வயலுக்கு தெளிக்க கூடிய பூச்சிமருந்தும் இருந்துள்ளது. அப்போது வெல்லத்துடன் பூச்சி மருந்தும் கலந்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தெரியாமல் அந்த வெல்லத்தை வைத்து வீ்ட்டில் பாயாசம் செய்து அனைவரும் சாப்பிட்டனர். 3 மணி நேரம் கழித்து மாலை 5 மணிக்கு அனைவருக்கும் வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியைடந்த முருகன் அருகில் உள்ளவர்களிடம் இது பற்றி தெரிவித்தார்.
இதையடுத்து அக்கம்பக்கத்தினர் உடனடியாக அனைவரையும் மீ்ட்டு பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு சுமதி, சுதிஷ் இருவரும் இறந்தனர். மற்ற 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து பணகுடி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.