'இந்து' ராம் மீது மாஜி அதிமுக எம்.பி. பரபரப்பு நில அபகரிப்புப் புகார்
சென்னை: இந்து நாளிதழின் முன்னாள் ஆசிரியர் என்.ராம் மற்றும் இந்து நாளிதழைச் சேர்ந்த ரமேஷ் ரங்கராஜன் ஆகியோர் மீது 400 ஏக்கர் நிலத்தை மோசடியாக அபகரித்து விட்டதாக மாஜி அதிமுக எம்.பி. பழனிச்சாமி பரபரப்புப் புகார் கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக சென்னையில் இன்று டிஜிபி மற்றும் சென்னை மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை நேரில் சந்தித்து பழனிச்சாமி புகார் கொடுத்தார்.
இதுகுறித்து தனது புகாரில் பழனிச்சாமி கூறியிருப்பதாவது:
தி இந்து நாளிதழை நடத்தும் கஸ்தூரி அண் சன்ஸ் நிறுவனத்திற்கு உட்பட்ட, ஸ்போர்ட்டிங் பாஸ்ட் டைம் என்ற நிறுவனத்தையும் அதற்கு சொந்தமான நிலங்களையும், 2004ம் ஆண்டு, 30 கோடி ரூபாய்க்கு வாங்கினேன்.
மாமல்லபுரம் அருகே உள்ள 400 ஏக்கர் பரப்புள்ள அந்த நிலங்களின் மதிப்பு சில நாட்களில், ரூ.300 கோடி ரூபாயாக உயர்ந்து விட்டது. இதை அறிந்து கொண்டு, இந்து நிர்வாகிகள், என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்டோர் ரூ.300 சொத்தை, ரூ.30 கோடிக்கு திரும்ப தருமாறு, வற்புறுத்தி வருகின்றனர்.
300 கோடி ரூபாய் சொத்தை, தர மறுப்பதால், ராம், ரமேஷ் உள்ளிட்டோர், காவல்துறையில் என் மீது பொய்யான புகார் கொடுத்து, கைது செய்ய வைத்தனர். குண்டர்களை வைத்து கொலை மிரட்டல் விடுத்தனர்.
மேலும் சொத்து தொடர்பான ஆவணங்களை ஆள் வைத்து, திருடிச் சென்று விட்டனர். இந்த சொத்துக்கள் தொடர்பாக வழக்கு விசாரணை நடந்து வருகிறது. நிலத்தின் உரிமை என்னுடைய பெயரில் உள்ளது. எனவே, இந்து நிர்வாகிகள் என்.ராம், ரமேஷ், ரங்கராஜன் உள்ளிட்ட 8 பேர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்தப் புகார் குறித்து விசாரிக்குமாறு மத்திய குற்றப் பிரிவு போலீஸாருக்கு மாநகர காவல்துறை ஆணையர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
இந்தியாவின் முன்னணி நாளிதழின் குடும்பத்தைச் சேர்ந்த இருவர் மீது நில அபகரிப்புப் புகார் பாய்ந்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ச்மீபத்தில்தான் இந்து நாளிதழின் ஆசிரியர் பொறுப்பிலிருந்து ராம் விலகினார் என்பது நினைவிருக்கலாம்.