2ஜி ஊழல் வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜராகாத எஸ்ஸார்-லூப் டெலிகாம் உரிமையாளர்கள்
டெல்லி: 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தொடர்புடைய எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்களின் உரிமையாளர்கள் இன்று சிபிஐ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. தங்களுக்கு முறையான சம்மன் அனுப்பி வைக்கப்படவில்லை என்று தங்களது வழக்கறிஞர்கள் மூலம் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளனர்.
எஸ்ஸார் தொழில் குழுமத்தின் உரிமையாளர்களான அனுஷ்மன் ரூபா, ரவி ரூயா ஆகியோர் மீதும், லூப் டெலிகாம் நிறுவன அதிபர்களான கிரண் கெய்தான், அவரது கணவர் ஐ.பி.கெய்தான் ஆகியோர் மீது 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிபிஐ வழக்குத் தொடர்ந்துள்ளது. இவர்கள் மீது சமீபத்தில் டெல்லி நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்தது.
இதையடுத்து, கைது செய்யப்படலாம் என்ற அச்சத்தில் இவர்கள் துபாய்க்குச் சென்றுவிட்டனர். இவர்களை விசாரணைக்கு வரக் கோரி நீதிமன்றம் அனுப்பிய சம்மன்களை, அவர்களது வீடுகள், அலுவலகங்களில் யாரும் வாங்கவில்லை. இதையடுத்து இந்த சம்மன்கள் அங்கு ஒட்டப்பட்டுள்ளன.
2008ம் ஆண்டில் வோடபோன் நிறுவனத்தில் 33 சதவீத பங்குகளை வைத்திருந்த எஸ்ஸார் நிறுவனம், லூப் டெலிகாமிலும் பெரும் பங்குகளை வைத்திருந்தது. ஒரு மண்டலத்தில் 2ஜி லைசென்ஸ் பெறும் தொலைத் தொடர்பு நிறுவனம் இன்னொரு தொலைத் தொடர்பு நிறுவனத்தில் 10 சதவீதத்துக்கு மேல் பங்குகளை வைத்திருக்கக் கூடாது என்பது விதி.
ஆனால், இந்த விதியை மீறி லூப் டெலிகாமின் பெயரைப் பயன்படுத்தி எஸ்ஸார் நிறுவனம் தனக்கு ஒதுக்கப்பட்டதை விட அதிகமான அளவு ஸ்பெக்ட்ரத்தை வாங்கியது. இதன்மூலம் எஸ்ஸார் நிறுவனம் மாபெரும் லாபம் அடைந்தது. அப்போது வோடபோன் நிறுவனத்தில் பெரும் பங்கை எஸ்ஸார் நிறுவனம் வைத்திருந்தது.
இதையடுத்து எஸ்ஸார் மற்றும் லூப் டெலிகாம் நிறுவனங்களை 2ஜி வழக்கில் சிபிஐ சேர்த்தது. ஆனால், சிபிஐ விசாரணைக்கு வராமல் இழுத்தடித்த இந்த இரு நிறுவனங்களின் அதிபர்களும் இன்று (ஜனவரி 27ம் தேதி) நேரில் ஆஜராக வேண்டும் என சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.
ஆனால், ரவி ரூயா, அனுஷ்மான் ரூயா, ஐ.பி கேதான், கிரண் கேதான் ஆகியோர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதாடுகையில் எங்கள் கட்சிக்காரர்களுக்கு துபாயில் தான் சொந்த வீடுகள் உள்ளன. ஆனால் டெல்லியில் உள்ள முகவரிக்கு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களால் இந்த சம்மனை பெற முடியவில்லை என்றனர்.
மேலும் இந்த விசாரணையில் சிறப்பு நீதிபதி ஓ.பி. சைனிக்கு அதிகாரம் இருக்கிறதா என்ற கேள்வி எழுப்பும் வழக்கும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது என்றும் கூறினார்.
எஸ்ஸார், லூப் நிறுவனங்கள் மீது சி.பி.ஐ. வழக்கு தொடர காலம் தாமதம் செய்வது ஏன் என்று கேள்வி எழுப்பி பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் அவர் வாதாடுகையில், எஸ்ஸார், லூப் நிறுவனங்களுக்கு எதிராக, பலமான ஆதாரங்கள் இருப்பதாகவும் ஆனாலும், இந்த நிறுவனங்களுக்கு எதிராக, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை என்றும், இந்த விவகாரத்தை சுப்ரீம் கோர்ட் கண்காணித்து வரும் நிலையிலும் கூட, இவர்கள் மீது சி.பி.ஐ. மென்மையான போக்கை கடைப்பிடிக்கிறது என்றும், இந்த விவகாரத்தில், மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்தின் தலையீடு உள்ளதாகக் கூறப்படுகிறதும் என்றும் பிரசாந்த் பூஷண் கூறியிருந்தார்.
இதையடுத்தே இந்த நிறுவனங்கள் மீதான சிபிஐயின் விசாரணை வேகம் எடுத்ததும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications