ராகுல் பிரதமராகட்டும், அவரால் என்ன செய்ய முடியும் என்பதைப் பார்த்து விடுவோம்-பாஜக
லக்னோ: இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன. இந்தக் காலத்திற்கு ராகுல் காந்தி பிரதமராக இருக்கட்டும். அப்போதுதான் அவரது திறமையை இந்த நாடு அறிந்து கொள்ள முடியும். நாட்டின் பிரச்சினைகள் குறித்த அவரது அறிவு என்ன என்பதை மக்கள் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும் என்று சவால் விட்டுப் பேசியுள்ளார் பாஜக செய்தித் தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத்.
இதுகுறித்து லக்னோவில் அவர் பேசுகையில், ராகுல் காந்தி பிரதமராகட்டும். அதையும்தான் பார்த்து விடுவோம். இன்னும் 2 ஆண்டுகள் மீதமுள்ளன. அவரது திறமை என்ன என்பதை இந்த நாட்டு மக்கள் பார்க்கட்டும், உணரட்டும். நாட்டின் பிரச்சினைகளை அவர் எந்தளவுக்குப் புரிந்து வைத்துள்ளார் என்பதையும் மக்கள் பார்த்துக் கொள்ளட்டும்.
ராகுல் பிரதமராக பெரிதாக கவலைப்பட வேண்டியதில்லை, சிரமப்பட வேண்டியதில்லை. பிரதமர் மன்மோகன் சிங்கைப் பதவி விலகச் சொன்னால் போதும் என்றார் பிரசாத்.
பிரசாத்தின் இந்த சவாலுக்கு காங்கிரஸ் கட்சி பதிலடி கொடுத்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், உண்மையை அவர்கள் இப்போதாவது ஒத்துக் கொண்டுள்ளார்களே அதற்காகப் பாராட்ட வேண்டும். 2014ல் காங்கிரஸ்தான் மீண்டும் ஆட்சிக்கு வரப் போகிறது. உ.பியில் இந்த ஆண்டே வரப் போகிறது. இதுதான் உண்மை. இதை மாற்றவோ, நிறுத்தவோ முடியாது.
காங்கிரஸிடம் பாஜக சரணடைந்ததையே பிரசாத்தின் பேச்சு காட்டுகிறது. அதை விட முக்கியம், அவர்கள் பேசுவதை நாட்டு மக்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளப் போவதில்லை என்பதுதான் என்றார் சிங்வி.












Click it and Unblock the Notifications