கூடங்குளம் பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம்: இந்து முன்னணி தாக்கு
நெல்லை: கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாக இநது முன்னணி குற்றம் சாட்டியுள்ளது.
இது தொடர்பாக இந்து முன்னணி கட்சியின் மாநில துணை தலைவர் ஜெயக்குமார், மாநகர் மாவட்ட தலைவர் பாலாஜி கிருஷ்ணசாமி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் குற்றாலநாதன் ஆகியோர் நெல்லை கலெக்டர் செல்வராஜிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது,
இந்தியாவின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு கூடங்குளத்தில் அணுமின் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கதிரியக்கத்தை காரணம் காட்டி மக்களை போராட்ட குழுவினர் அச்சுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பல்வேறு தொழில் அமைப்புகள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் கூடங்குளம் அணுமின் நிலையத்தை உடனே திறந்து மின்உற்பத்தியை துவங்க ஆதரவு அளித்து வரும் நிலையில் சட்டத்திற்கு புறம்பாக போராட்டம் நடத்தி வருபவர்களுக்கு அஞ்சி திட்டத்தை நிறுத்தி வைப்பது மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தை காட்டுகிறது. பல்வறு போராட்டங்களை ஒடுக்கிய தமிழக அரசு கூடங்குளம் போராட்டத்தை ஒடுக்கத் தவறுவது ஏன் என்ற கேள்வி எழுகிறது.
செவிலிய மாணவ, மாணவிகளை கைது செய்து சிறையில் அடைக்கும் தமிழக அரசு அனுமதியின்றி நடக்கும் கூடங்குளம் போராட்டத்தில் மென்மையாக நடந்து கொள்வது ஏன், அணுமின் நிலைய விவகாரத்தை வைத்து மத்திய அரசை அரசியல் ரீதியாக நிர்பந்திக்க தமிழக அரசு முயல்வதாக ஐயம் எழுந்துள்ளது. கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் தமிழக அரசு இரட்டை வேடம் போடுவதாகத் தெரிகிறது. இரண்டு, மூன்று வழக்குகள் பதிவு செய்யப்பட்டவர்களை கூட குண்டர் சட்டத்தில் கைது செய்யும் தமிழக அரசு 140 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை உலவ விடுவதன் காரணம் என்ன? எனவே, கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உற்பத்தியை உடனே துவங்க வேண்டும். 140 வழக்குகளுக்கு மேல் பதிவு செய்யப்பட்டுள்ள போராட்டக் குழுவினரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications