ராவணனின் பண லாரி வருதாம்லப்பா...காடு மேடெல்லாம் தேடிய போலீசார்!
கரூர்: சசிகலா உறவினரான ராவணனுக்கு சொந்தமான கண்டெய்னர் லாரி கரூரில் சுற்றித் திரிவதாகக் கிளம்பிய வதந்தி பலரையும் அதிர்ச்சி அடைய வைத்தது.
முதல்வர் ஜெயலலிதாவின் உயிர்த் தோழியாக இருந்த சசிகலாவின் உறவினர் ராவணன் மீது கொலை, மோசடி, பணம் பறிப்பு, மிரட்டல் போன்ற அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளன.
இதற்கிடையே கோவை காரமடையைச் சேர்ந்த கட்டிட கான்டிராக்டர் ரவிக்குமார் என்பவரை கடத்திச் சென்று ரூ.10 லட்சம் பணம் பறித்த வழக்கில் ராவணன் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். ராவணன் யார், யாரிடம் கோடிக்கணக்கில் பணத்தை வாரிச்சுருட்டினார். எங்கெங்கு சொத்துக்களை வாங்கிக் குவித்துள்ளார்? என்பது குறித்து போலீசார் தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ராவணன் அரசியல் பிரமுகர்களிடமும், அதிகாரிகளிடமும் மிரட்டி பெற்ற பணத்தை ஒரு கன்டெய்னர் லாரியில் 1000 ரூபாய் தாள்களாக எடுத்து வந்ததாகவும், அதை கரூர் வேலாயுதம்பாளையம் மற்றும் புன்னம் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்தில் மறைத்து வைத்துள்ளதாகவும் தகவல் பரவியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசாரும், செய்தியாளர்களும் அந்த லாரியைத் தேடி காடுகாடாக அலைந்தனர். ஆனால் அப்படி எந்த லாரியும் சிக்கவில்லை. இறுதியில் இந்த தகவல் வதந்தி என தெரிய வந்தது. ஆனால் இந்த வதந்தியால் போலீசாரும், செய்தியாளர்களும் காலை முதல் இரவு வரை படாதபாடு பட்டுவிட்டனர்.