ஊத்துக்கோட்டையில் விஜயகாந்த் கொடும்பாவியை எரித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டையில் தேமுதிக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான விஜயகாந்த் உருவ பொம்மையை வழக்கறிஞர்கள் எரித்ததால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
தமிழக சட்டசபையில் தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கும், முதல்வர் ஜெயலலிதாவிற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தேமுதிகவுடன் கூட்டணி வைத்தற்கு வெட்கப்படுவதாக ஜெயலலிதா தெரிவித்தார். தகுதியில்லாதவர்களுடன் கூட்டணி சேர்ந்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்நிலையில் சட்டசபையில் விஜயகாந்த் நடந்து கொண்டதை கண்டித்து திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை குற்றவியல் மற்றும் உரிமையியல் நீதிமன்ற வழக்கறிஞர்கள் இன்று காலை திடீர் போராட்டம் நடத்தினர்.
அப்போது அவர்கள் விஜயகாந்தின் உருவ பொம்மையை நடுரோட்டில் போட்டு தீ வைத்து எரித்தனர். மேலும், விஜயகாந்துக்கு எதிராக கோஷம் எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
இந்த போராட்டத்தில் வழக்கறிஞர்கள் வேல்முருகன், வெற்றி தமிழன், சதீஷ், பாலகிருஷ்ணன், கணபதி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த திடீர் போராட்டத்தினால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.