எம்.எல்.ஏக்களுக்கு இனி தொகுதிப் படி ரூ. 10,000-தொகுதிக்கு அடிக்கடி வருவார்களா?
சென்னை: தமிழக சட்டசபை உறுப்பினர்களுக்கான தொகுதிப்படி ரூ. 5000 என்பதிலிருந்து ரூ. 10,000 உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான சட்ட மசோதாவை முதல்வர் ஜெயலலிதா இன்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.
இதுதொடர்பாக சட்டசபையில் தமிழ்நாடு சம்பளங்கள் வழங்கல் திருத்த சட்ட முன் வடிவை முதல்வர் ஜெயலலிதா இன்று தாக்கல் செய்தார்.
அதன் விவரம்:
முதல்வர் மற்றும் அமைச்சர்கள் ஒவ்வொருவருக்கும், அவைத்தலைவர், அவை துணை தலைவர், எதிர்க்கட்சித்தலைவர், அரசு தலைமை கொறடா மற்றும் எம்.எல்.ஏ.க்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் தொகுதிப் படியை ரூ.5,000-ல் இருந்து ரூ.10 ஆயிரமாக உயர்த்துவது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்ட பேரவை அல்லது சட்டமன்ற மேலவையில் முன்னாள் உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் வழங்கப்படும் ஓய்வூதியத்தை ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரம் ஆக உயர்த்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டமன்ற பேரவையின் இறந்த சட்டமன்ற உறுப்பினர் அல்லது மேலவை உறுப்பினர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் குடும்ப ஒய்வூதியத்தை ரூ.5,000-ல் இருந்து ரூ.6,000 ஆக உயர்த்துவது என்றும் முடிவு செய்துள்ளது.
இதற்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் சட்டத்தை திருத்த அரசு முடிவு செய்துள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.