சென்னை நீதிமன்றத்தில் ராவணன் ஆஜர்- புழல் சிறையில் அடைப்பு- கஸ்டடி கோரி போலீஸ் மனு
வழக்கு என்ன?
கோவை மாவட்டம் சிறுமுகையை சேர்ந்த ரவிக்குமார் என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பணம் பறித்த வழக்கில் ராவணன் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இப்புகாரைத் தொடர்ந்து மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக கூறி ஒரு கோடி ரூபாய் மோசடி செய்தார் என்று திருப்பூரைச் சேர்ந்த தொழிலதிபர் கிருஷ்ணமூர்த்தி சென்னை மாநகர காவல்துறையிடம் புகார் கொடுத்திருந்தார்.
இந்த வழக்கில் ராவணனை கைது செய்ய சென்னை போலீஸார் கோவை சிறையிலிருந்து ராவணனை அழைத்து வந்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
ராவணன் மீது அடுத்தடுத்து புகார்கள் வரும் நிலையில் அவரை காவலில் வைத்து விசாரிக்கக் கோரி போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணையை வரும் 6-ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி பாலசுப்பிரமணியம், ராவணனை 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து புழல் மத்திய சிறையில் ராவணன் அடைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராவணனின் வழக்கறிஞர் பா.ப. மோகன்,.இன்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்யும்போது, ரிமாண்ட் செய்வதற்கான அடிப்படை எதுவும் இல்லை என்று சொல்லி, விடுதலை செய்வதற்கான மனு தாக்கல் செய்திருந்தோம்.. நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டம் காரணமாக வாதிடவில்லை. வருகிற 6ந் தேதி நடைபெறும் விசாரணையின் போது ராவணனை போலீஸ் காவலில் எடுக்கக் கூடாது என வாதிடுவோம் என்றார்.