லாரி மோதி விபத்து: திருச்செந்தூர் பாதயாத்திரை சென்ற பக்தர்கள் 2 பேர் பலி
தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே பாதயாத்திரை சென்ற பக்தர்கள் மீது, மினி லாரி மோதியதால் இருவர் பரிதாபமாக பலியானார்கள்.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலையம்பட்டியைச் சேர்ந்த பக்தர்கள் 20 பேர், தைப்பூசத்தை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு பாதயாத்திரை சென்று கொண்டிருந்தனர்.
அவர்கள் தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை அருகே சென்று கொண்டிருந்த போது, பெங்களூரிலிருந்து தூத்துக்குடிக்கு சென்ற மினி லாரி, அவர்கள் மீது மோதியது. இதில், கார்மேகம் என்பவரது மனைவி செல்வி (30), முத்துராஜ் என்பவர் மனைவி லட்சுமி(53), ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார்கள்.
மேலும், இந்த விபத்தில் வேலுச்சாமி என்பவர் மனைவி அழகம்மாள் (40), மருதன் என்பவர் மனைவி லட்சுமி (28) ஆகியோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்திற்கு காரணமான மினிலாரி டிரைவரை, போலீசார் தேடிவருகின்றனர்.