ஜெ. அவதூறு வழக்கு: ஸ்டாலினுக்கு சம்மன்
சென்னை: முதல்வர் ஜெயலலிதா மீதான அவதூறு வழக்கில், மார்ச் 9ம் தேதி ஆஜராக வேண்டும் என்று மு.க.ஸ்டாலினுக்கு சம்மன் அனுப்ப சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கொடநாடு, சிறுதாவூர் சொத்துகள் தொடர்பாக தமிழக முதல்வர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடந்த டிசம்பர் 2ம் தேதி டிஜிபியை சந்தித்து, ஸ்டாலின் மனு கொடுத்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு மு.க ஸ்டாலின் பேட்டி அளித்தார். இது பொய்யான தகவல் என்றும், முதல்வர் மீது அவதூறு கற்பிக்கும் செயல் என்றும், ஜெயலலிதா சார்பில் வழக்குரைஞர் ஜெகன் சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கலையரசன் பரிசீலனை செய்து, வரும் மார்ச் 9ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக வேண்டும் என்று சம்மன் அனுப்புமாறு உத்தரவு பிறப்பித்தார்.
இதேபோல் முதல்வர் ஜெயலலிதா குறித்து அவதூறு செய்தி வெளியிட்ட தமிழ்முரசு ஆசிரியர், பதிப்பாளர், வெளியீட்டாளரும் மார்ச் 9ம் தேதி ஆஜராக சம்மன் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது.