உபி: காங்கிரஸின் நடிகை வேட்பாளரைத் தாக்கிய ஆளுங்கட்சியினர்- புகார் வாங்க மறுத்த போலீஸ்

போஜ்பூரி நடிகை காஜல் நிஷாத் காங்கிரஸ் சார்பில் உத்தர பிரதேச சட்டசபை தேர்தலில் கோரக்பூரில் போட்டியிடுகிறார். அவர் கடந்த 4ம் தேதி இரவு கக்ரகோரில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தபோது ஆளும் பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் ராம் புலாவன் நிஷாத்தின் ஆதரவாளர்கள் அங்கு வந்தனர். அவர்கள் தாங்கள் கொண்டு வந்த இரும்புக் கம்பிகள், லத்திகள் மற்றும் கற்களால் காஜலைத் தாக்கினர். அப்போது காஜல் அருகே தான் ராம் புலாவன் நின்று கொண்டிருந்தார்.
காஜலைத் தாக்கிவிட்டு புலாவன் உள்பட அனைவரும் அந்த இடத்தைவிட்டு சென்றுவிட்டனர். இதில் காஜலுக்கு ரத்தக் காயம் ஏற்பட்டு விட்டது. காயமடைந்த அவர் அந்த இடத்திலேயே தர்ணா போராட்டம் நடத்தினார். அவரைத் தாக்கியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட நீதிபதி சஞ்ஜய் குமார் தெரிவித்த பிறகே தனது போராட்டத்தைக் கைவிட்டார்.
இது குறித்து காஜல் கூறியதாவது,
போலீசார் பகுஜன் சமாஜ் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகின்றனர். ஆளுங்கட்சி வேட்பாளரின் ஆதரவாளர்கள் என்னைத் தாக்கியது குறித்து பேலிபார் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தேன். ஆனால் அவர்கள் நான் சொல்வதைக் கேட்கக் கூடத் தயாராக இல்லை. ஒரே இடத்தில் இரண்டு கட்சியினரும் கூட்டம் நடத்த அதிகாரிகள் அனுமதி அளித்தனால் தான் இவ்வாறு நடந்துள்ளது என்றார்.
ராம் புலாவன் கூறுகையில், நான் மகாவீர் சாப்ராவை அடைந்தபோது காஜலின் ஆதரவாளர்கள் தான் எங்களைத் தாக்கினர். நாங்கள் அங்கிருந்து அமைதியாகப் புறப்படவே விரும்பினோம் என்றார்.
இளைஞர் காங்கிரஸைச் சேர்ந்த காஜலின் பிரச்சராக் கூட்டங்களில் மக்கள் கூட்டம் அலைமோதுவதால் அவர் தாக்கப்பட்டார் என்று கூறப்படுகின்றது.












Click it and Unblock the Notifications