சங்கரன்கோவில் தொகுதியை கைப்பற்ற அதிமுக வியூகம்: நலத் திட்டங்கள் ஜரூர்
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் இடைத்தேர்தல் களத்தில் வேட்பாளர்களை சந்திக்க 2.05 லட்சம் வாக்காளர்கள் தயாராகியுள்ளனர். தொகுதியை கைப்பற்ற அதிமுக வியூகங்கள் வகுத்து வருகிறது.
சங்கரன்கோவில் எம்.எல்.ஏ.வாக இருந்த கருப்பசாமி மரணமடைந்ததையடுத்து இத்தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. இங்கு அதிமுக வேட்பாளராக முத்துச்செல்வி அறிவிக்கப்பட்டு அவர் பிரசாரத்தை துவங்கியுள்ளார். தேர்தல் பொறுப்பாளர்களாக 26 அமைச்சர்கள் உள்பட 34 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெற அக்கட்சி அனைத்து வியூகங்களையும் வகுத்து வருகிறது.
இத்தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்களிடம் இருந்து விருப்ப மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. இதில் பலர் ஆர்வமாக விருப்ப மனுக்களை அளித்து வருகின்றனர். சட்டசபையில் தேமுதிகவுடன் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து அக்கட்சி நிர்வாகிகள் பலரை அதிமுகவுக்கு இழுக்கும் வேலை ஜரூராக நடக்கிறது. இதனால் இத்தேர்தலில் அதிமுகவுக்கு சவால் விடுக்கும் வகையில் தேர்தல் பணியாற்றி ஓட்டுகளை கவர தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் மற்றும் ஆதரவு கட்சிகள் இணைந்து பொது வேட்பாளரை நிறுத்தவும் ஆலோசனை நடத்தப்படுகிறது. இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது.
இந்நிலையில் சங்கரன்கோவில் தொகுதியில் பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. முதற்கட்டமாக இங்கு அதிகாரிகள் அதிரடியாக மாற்றப்பட்டுள்ளனர். சங்கரன்கோவில் தாசில்தாராக தாமோதரன், நலிந்தோர் நல திட்ட தாசில்தாராக அப்துல் காசீம் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இத்தொகுதியில் வாக்காளர்களை கவரும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன்களை முழு வீச்சில் வழங்கும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இதற்காக இத்தொகுதி மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்டு துணை கலெக்டர்கள் அந்தஸ்தில் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
30.6.2011 நிலவரப்படி ரேஷன் கடைகளில் அரிசி பெறும் ரேஷன்கார்டுதாரர்கள் அனைவருக்கும் இலவச மிக்சி, கிரைண்டர், ஃபேன்களை வழங்கவும் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. மேலும் தொகுதியில் குடிநீர், சாலை, மின்சார வசதி உட்பட அனைத்து வசதிகளும் முழு வீச்சில் செய்யப்பட வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
நீண்ட காலமாக நிறைவேற்றப்படாமல் உள்ள அரசு திட்டங்களையும் உடனடியாக நிறைவேற்றும் வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமைச்சர்கள் ஆலோசனையின்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சங்கரன்கோவில் தொகுதியில் தற்போதைய நிலவரப்படி 1 லட்சத்து 2 ஆயிரத்து 795 ஆண் வாக்காளர்கள், 1 லட்சத்து 3 ஆயிரத்து 45 பெண் வாக்காளர்கள் உட்பட மொத்தம் 2 லட்சத்து 5 ஆயிரத்து 840 வாக்காளர்கள் உள்ளனர். தேர்தல் தேதி அறிவிப்புக்கு பிறகும் வேட்பு மனுத்தாக்கலுக்கு முன்பு வரை புதிய வாக்காளர்கள் சேர்க்கப்படும் சூழ்நிலையில் தொகுதியில் வாக்காளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த மாத இறுதியிலோ அல்லது வரும் மார்ச் மாதம் முதல் வாரத்திலோ தேர்தல் ஆணையம் தேர்தல் தேதியை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications