இலங்கை போர் விமானம் விழுந்து நொறுங்கியது
கொழும்பு:இலங்கை விமானப்படைக்கு சொந்தமான மிக் 27 ஜெட்ரக போர் விமானம் தலைநகர் கொழும்புக்கு அருகே விழுந்து நொறுங்கியது.
சர்வதேச விமான நிலையமான கட்டுநாயக்கவை அடுத்துள்ள புத்தளத்தின் ஹேவனவில் தென்னந்தோப்பு ஒன்றில் விமானம் வீழ்ந்தது.
கட்டுநாயக்க விமான தளத்தில் இருந்து புறப்பட்டு வழக்கமான பயிற்சியில் ஈடுபட்ட போது விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விமானத்தில் இருந்த விமானி ஹேரத் எந்த காயமுன்றி உயிர் தப்பியுள்ளார்.
தொழில்நுட்பக் கோளாறினால் விமானம் விழுந்ததாக இலங்கை விமானப்படை செய்தித் தொடர்பாளர் அண்டி விஜேயசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கான போரில் அதிகம் பயன்படுத்தப்பட்டவை மிக் 27 ஜெட் ரக விமானங்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இது ரஷ்ய நாட்டுத் தயாரிப்பாகும்.
மிக சொற்ப எண்ணிக்கையில்தான் இலங்கை இந்த ரக விமானங்களை வைத்துள்ளது. தற்போது அதில் ஒன்று போண்டியாகியுள்ளது.