சங்கரன்கோவிலில் ஸ்டாலினுக்கு வீடு தேடும் திமுகவினர்!

சங்கரன்கோவில் சட்டசபைத் தொகுதி(தனி) இடைத்தேர்தல் விரைவில் நடக்க இருக்கிறது. இந்நிலையில் அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். மதிமுக தேர்தல் அலுவலகத்தை திறந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின் திமுக வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இடைத்தேர்தலில் திமுகவும் போட்டியிடுவது உறுதியாகி இருக்கிறது.
அதிமுகவின் கோட்டை என்று வர்ணிக்கப்படும் சங்கரன்கோவிலில் திமுகவை வெற்றி பெறச் செய்வதற்காக ஸ்டாலின் சங்கரன்கோவிலில் முகாமிட்டு தேர்தல் களத்தில் நேரடியாக ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அவர் முகாமிடும் போது சங்கரன்கோவிலிலேயே தங்குவார் என்றும் கூறப்படுகிறது. இதற்கு ஏற்றாற்போல் சங்கரன்கோவிலில் அவர் தங்குவதற்காக திமுகவினர் வீடு பார்த்து வருகின்றனர்.
இடைத்தேர்தலில் ஆளும் அதிமுக அரசு தன்னுடைய முழு பலத்தையும் காட்டும் என்பதால் இதற்கு ஈடுகொடுத்து திமுகவினர் தேர்தல் பணியில் ஈடுபடுவார்களா என்ற சந்தேகமும் திமுக தலைமைக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications