ரயில் பெட்டிகள் பற்றாக்குறையால் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை: தெற்கு ரயில்வே
விழுப்புரம்: ரயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளதால் தமிழகத்தில் கூடுதல் ரயில்களை இயக்க முடியவில்லை என்று தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம்-மயிலாடுதுறை மார்க்கத்தில் தெற்கு ரயில்வே பொது மேலாளர் தீபக் கிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது,
தானே புயலால் விழுப்புரம்-மயிலாடுறை ரயில் மார்க்கத்தில் அதிக சேதம் ஏற்பட்டது. அது போர்க்கால அடிப்படையில் சீரமைக்கப்பட்டது. விழுப்புரம் எம்.பி. மற்றும் ரயில் பயணிகள் சங்கம், வணிகர் சங்க நிர்வாகிகள் உள்ளிட்டோர் தமிழகத்தின் பல மார்க்கங்களில் ரயில்களை இயக்குமாறு கேட்டு கொண்டுள்ளனர். அக்கோரிக்கைகளை ஆய்வு செய்தபிறகு ரயில்கள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
வரும் 20ம் தேதி முதல் விழுப்புரம்-காட்பாடிக்கு தினசரி பாசஞ்சர் ரயில் இயக்கப்பட உள்ளது. சோதனை அடிப்படையில் ஏப்ரல் மாதம் வரை இந்த ரயில் இயங்கும். அதன்பிறகு தினமும் இயக்கப்படும். விழுப்புரம்-வேலூர் மார்க்கத்தில் மதுரை-திருப்பதி எக்ஸ்பிரஸ் இயக்கப்பட்டு வருகின்றது.
தெற்கு ரயில்வேயில் 200க்கும் அதிகமான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் 230 ரயில்கள் தேவைப்படுகின்றது. ஆனால் ரயில் பெட்டிகள் பற்றாக்குறை உள்ளதால் புதிய ரயில்களை இயக்க முடியவில்லை என்றார்.
தமிழக்தில் பேருந்து கட்டணம் அதிக அளவு உயர்த்தப்பட்டதால் பொதுமக்கள் பலரும் ரயில் பயணத்தையே விரும்புகின்றனர். ஆனால் ரயில் பெட்டிகளில் போதிய இடவசதி இல்லாமல் மக்கள் பெரும் அவதிப்படுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications