உ.பியில் இன்று 3வது கட்ட தேர்தல்...அமேதியில் ராகுல் 'கை' ஓங்குமா?
டெல்லி: உ.பியில் இன்று 3வது கட்ட சட்டசபைத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தியின் அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட 3 சட்டசபைத் தொகுதிகளும் அடக்கம் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
உ.பியில் இதுவரை 2 கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. இன்று 3வது கட்ட வாக்குப் பதிவு நடைபெறுகிறது. மொத்தம் 10 மாவட்டங்களில் உள்ள 56 தொகுதிகளுக்கு இன்று வாக்குப் பதிவு நடைபெறுகிறது. 1.75 கோடி வாக்காளர்கள் ஓட்டுப் போடவுள்ளனர். 1018 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.
இதில் வாரணாசி, சுல்தான்பூர், கெளசாம்பி, அலகாபாத், ஜான்பூர், சந்தோலி, சந்த் ரவிதாஸ் நகர், மிர்ஸாபூர், சோன்பத்ரா ஆகிய தொகுதிகளில் மிக பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று தேர்தலை சந்திக்கும் தொகுதிகளில் ஜகதீஷ்பூர், கெளரிகஞ்ச், அமேதி ஆகியவை முக்கியமானவையாகும். இந்த மூன்று தொகுதிகளும் ராகுல் காந்தியின் அமேதி எம்.பி தொகுதிக்குட்பட்டவையாகும்.
ராகுல் காந்தி உ.பி. தேர்தலுக்கு மிக தீவிரமான பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். எனவே அவரது தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி வாகை சூடுமா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
குறிப்பாக அமேதி தொகுதியில் ராகுலும், அவரது சகோதரி பிரியங்காவும் மிக மிக தீவிரமாக பிரசாரம் செய்துள்ளனர். கூடவே பிரியங்காவின் கணவர் ராபர்ட் வத்ராவும் இத்தொகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார்.
எனவே அமேதி எம்.பி. தொகுதிக்குட்பட்ட சட்டசபைத் தொகுதிகளில் மக்கள் யாருக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்பது பெருத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமேதி எம்.பி. தொகுதி தொடர்ந்து இந்திரா காந்தி குடும்பத்திடமே இருந்து வருவது குறிப்பிடத்தக்கது. சஞ்சய் காந்தியும், ராஜீவ் காந்தியும், தொடர்ந்து சோனியா காந்தியும் இந்தத் தொகுதியிலிருந்து மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். தற்போது இது ராகுல் காந்தி வசம் உள்ளது.
இந்திரா காந்தி முன்பு வென்ற ரேபரேலி தொகுதியில் தற்போது சோனியா காந்தி எம்.பியாக உள்ளார்.












Click it and Unblock the Notifications