ஈரோட்டில் கோவில் குருக்கள் வீட்டில் வெடி விபத்து: வெடித்தது குண்டா என்று விசாரணை
ஈரோடு: ஈரோட்டில் கோவில் குருக்களின் வீட்டில் நள்ளிரவில் பயங்கர சத்ததுடன் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் குருக்களின் வீடு மற்றும் பக்கத்து வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. இவ்விபத்திற்கு வெடிகுண்டு காரணமா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகின்றது.
ஈரோடு மாவட்டம் கோட்டை ஈஸ்வரன் கோவில் பகுதியைச் சேர்ந்தவர் சிவசுப்பிரமணியன்(70). இவர் கோட்டை ஈஸ்வரன் கோவிலில் தலைமை குருக்களாக உள்ளார். இவரும், இவரது தம்பிகளும் தங்கள் வீடுகளின் முன்பகுதியில் கடைகளை கட்டி வாடகைக்கு விட்டுள்ளனர். மேலும் வீட்டு மேல் மாடியிலும் 2 குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவில் சிவசுப்பிரமணியத்தின் வீட்டில் இருந்து பயங்கர வெடி சத்தம் கேட்டது. மேலும் அப்பகுதி முழுவதும் குலுங்கியது. சத்தம் கேட்டு கண்விழித்த அப்பகுதியினர் குருக்கள் வீட்டிற்கு ஓடி வந்தனர்.
அப்போது சிவசுப்பிரமணியத்தின் வீட்டின் சமையல் அறை கதவுகள் உடைந்து உள்ளிருந்து கரும்புகை வெளியாகிக் கொண்டிருந்தது. மேலும் சமையல் அறையில் இருந்த பொருட்கள் தீயில் எரிந்து கொண்டிருந்தன. இச்சம்பவத்தினால் ஏற்பட்ட அதிர்ச்சியில் கட்டிடத்தின் காரைகளும் பெயர்ந்து இருந்தன.
இது குறித்து உடனடியாக தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்து சம்பவ இடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் உட்பட அனைத்து பொருட்களையும் வெளியே கொண்டு வந்தனர்.
இது குறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பன்னீர் செல்வம் கூறியதாவது,
சிவசுப்பிரமணியத்தின் வீட்டு சமையல் அறையில் இருந்த கியாஸ் குழாயில் ஏற்பட்ட கசிவு அறை முழுவதும் பரவி உள்ளது. அறையில் இருந்த ஆட்டோமெட்டிக் பிரிட்ஜ் தானாக இயங்கத் துவங்கிய போது அதன் கம்ப்ரசர் வெடித்துச் சிதறியது. இதில் ஏற்பட்ட தீ, கியாஸ் மூலம் மேலும் பரவியது.
சமையல் அறை கதவு பூட்டப்பட்டிருந்ததால் பயங்கர சத்தத்துடன் கதவு மற்றும் சுவர்களை உடைத்து கொண்டு தீ வெளிப்பட்டுள்ளது. சிவசுப்பிரமணியம் வசிக்கும் பகுதி குறுகலான சந்து பகுதி என்பதால் அருகில் உள்ள சில வீடுகளின் சுவர்களிலும் விபத்தின் அதிர்ச்சியினால் விரிசல் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து முழு தடயங்களை பெற்று, வெடிகுண்டு நிபுணர்கள் ஆய்வு செய்து வருகின்றனர் என்றார்.