சங்கரன்கோவில் ஹவுஸ் ஓனர்களுக்கு 'யோகம்'-கட்சிகள் வீடு வேட்டையால் வாடகை உயர்வு!
சங்கரன்கோவில்: சங்கரன்கோவில் பகுதியில் அரசியல் கட்சியினர், தங்கியிருந்து பிரசாரம் செய்வதற்கு வாடகைக்கு வீடு தேடி வருவதால் வீட்டு வாடகை கடுமையாக உயர்ந்துள்ளதாம்.
இடைத்தேர்தலை முன்னிட்டு சங்கரன்கோவில் தொகுதியில் திமுக மற்றும் அதிமுக நிர்வாகிகள் வாடகைக்கு வீடு தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் திமுக தென் மண்டல பொறுப்பாளர் அழகிரியும் சங்கரன்கோவிலில் தங்கி தேர்தல் பணியில் ஈடுபட இருக்கிறார்.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக வேட்பாளராக முத்துசெல்வி அறிவிக்கப்பட்டு அவர் பிரச்சாரம் செய்து வருகிறார். கடந்த பவுர்ணமி நாளில் பிரச்சாரத்தை துவக்கிய வேட்பாளர் முத்துசெல்வி குருவிகுளம், மேலநீலிதநல்லூர் ஆகிய ஒன்றியங்களில் தீவிர ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார்.
இடைத்தேர்தல் பணிக்கு செயல்வீரர்கள் கூட்டத்தை நடத்தி 'பிள்ளையார் சுழி' போட்ட மதிமுகவும் தேர்தல் அலுவலகத்தை திறந்து தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளது.
திமுகவும் விரைவில் வேட்பாளரை அறிவிக்க இருக்கிறது. இந்நிலையில் சங்கரன்கோவிலுக்கு வந்த திமுக மாவட்ட செயலாளர் கருப்பசாமிபாண்டியன், கட்சியின் துணை பொது செயலாளர் ஸ்டாலின், தென்மண்டல பொறுப்பாளரும், மத்திய அமைச்சருமான அழகிரி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் தங்க இருக்கும் வீட்டை பார்த்தார்.
இதில் ஸ்டாலின் சங்கரன்கோவிலில் தங்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அழகிரி வாசுதேவநல்லூரில் உள்ள கட்சி பிரமுகர் ஒருவரது வீட்டில் தங்கலாம் என்று கூறப்படுகிறது. இதனால் சங்கரன்கோவில் தொகுதியில் உள்ள வீடுகளை வாடகைக்கு ஏற்பாடு செய்வதில் திமுக மற்றும் அதிமுகவினர் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இதையடுத்து சங்கரன்கோவில் தொகுதியில் வீட்டு வாடகை கணிசமாக உயர்ந்துள்ளது. தொகுதியில் வாடகைக்கு வீடு பிடிப்பதில் திமுக மற்றும் அதிமுக ஆர்வம் காட்டி வரும் நிலையில் மதிமுக மற்றும் தேமுதிக எந்த ஆர்வமும் காட்டாமல் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கட்சிகள் வீடு தேடி அலைவதால் சங்கரன்கோவிலில் நல்ல வீடாக வைத்துள்ள வீட்டு உரிமையாளர்கள் வாடகையை உயர்த்தி வைத்து கரை வேட்டிகைளை எதிர்பார்த்து காத்திருக்கின்றனராம்.












Click it and Unblock the Notifications