திருச்சியில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் கைது
திருச்சி: திருச்சியில் ரூ.5,000 லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு துறையினரால் கைது செய்யப்பட்டார்.
திருச்சியைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் நில விவகாரம் தொடர்பாக ரியல் எஸ்டேட் அதிபர் தன்னை ஏமாற்றிவிட்டதாக திருச்சி மாநகர கமிஷனரிடம் புகார் கொடுத்தார். இப்புகாரை விசாரிக்குமாறு திருச்சி மாநகர குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் நீதிமோகனுக்கு திருச்சி மாநகர கமிஷனர் உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சரஸ்வதியின் புகாரை விசாரித்த நீதிமோகன் ரூ.5,000 லஞ்சம் கேட்டுள்ளார். நீதிமோகனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சரஸ்வதி இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் கொடுத்தார்.
திருச்சி லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி அம்பிகாபதி தலைமையிலான அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில் சரஸ்வதி நீதிமோகனுக்கு லஞ்சப் பணத்தை கொடுத்தார். அப்போது மாறுவேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமோகனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications