3வது வழக்கில் ராவணன் கைது- செங்கோட்டையன் பி.ஏவும் கைதானார்
கோவை ரூ. 1 கோடி மோசடி வழக்கில் ராவணன், அமைச்சர் செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம் ஆகியோரை சென்னை போலீஸார் இன்று கைது செய்தனர்.
ராவணன் மீது பாய்ந்துள்ள 3வது வழக்கு இது. அதேசமயம், ஆறுமுகம் 2வது வழக்கில் கைதாகியுள்ளார்.
கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ரவிக்குமாரை மிரட்டி ரூ.10 லட்சம் பறித்ததாக சசிகலா உறவினர் ராவணன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்திருந்தனர்.இதன் பிறகு திருப்பூரை சேர்ந்த தொழில் அதிபர் கிருஷ்ணமூர்த்திக்கு மணல் குவாரி உரிமம் வாங்கி தருவதாக அவரிடம் ரூ.1 கோடி பெற்றுக் கொண்டு ஏமாற்றி மிரட்டியதாக சென்னை போலீசார் ராவணனை கைது செய்திருந்தனர்.
இந்த நிலையில் ராவணன் உள்ளிட்டோர் மீது மேலும் ஒரு புகார் வந்தது.
வேலூரை சேர்ந்த தொழில் அதிபர் புவனேசன் மணல் குவாரி குத்தகைக்கு எடுக்க அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகத்தை அணுகி உள்ளார். அப்போது அவர் சசிகலாவின் உறவினர் ராவணன் தான் இதை செய்து முடிக்க முடியும் என்று கூறி உள்ளார்.
இதனால் ராவணனை சந்தித்த போது அவர் ரூ.5 கோடி தந்தால் மணல் குவாரியை குத்தகைக்கு எடுத்து தருவதாக கூறி உள்ளார். இதற்காக முதல் தவணையாக ரூ.2 கோடியை ஆறுமுகத்திடம் புவனேசன் கொடுத்துள்ளார். ஆனாலும் மணல் குவாரி கிடைக்கவில்லை.
பணத்தை திருப்பி கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் திரிபாதியிடம் புவனேசன் புகார் கொடுத்துள்ளார்.
இதை விசாரித்த சென்னை போலீஸார் ராவணனை இன்று கைது செய்தனர். அதேபோல ஆறுமுகமும் கைது செய்யப்பட்டார். தற்போது ராவணன் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம்.