பிப். 26க்குப் பின்னர் முல்லைப் பெரியாறு குறித்த இறுதி அறிக்கை-ஐவர் குழு

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க உச்ச நீதிமன்றம், முன்னாள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான ஐவர் குழுவை அமைத்தது. இந்த குழுவில் தமிழகம் மற்றும் கேரளாவின் பிரதிநிதிகள் உள்ளனர். மத்திய அரசின் பிரதிநிதிகள் இருவரும் உள்ளனர்.
இந்த குழு அணைப் பகுதிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் இந்த குழு இன்று கூடியது.
இக்கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் இதுவரை நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அணையை துளையிட்டு ஆய்வு செய்யும் நீரி குழுவின் சோதனை மட்டும் இன்னும் தொடர்வதால், பிப்ரவரி இறுதியில் அறிக்கை அளிப்பது தாமதமாகலாம் எனபதால், மேலும் 3 மாதங்கள் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தை அணுக தீர்மானிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், இன்றைய கூட்டத்திற்குப் பின்னர் நீதிபதி லட்சுமணன் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு குறித்து தயாரிக்கப்பட்ட அறிக்கைக்கு குழு ஏற்கனவே ஒப்புதல் அளித்து அது பிப்ரவரி 8-ம் தேதி உச்சநீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. இறுதி அறிக்கை தாக்கல் செய்ய உச்சநீதிமன்றத்திடம் கால அவகாசம் கேட்டுள்ளோம்.
அணையில் துளையிட்டு ஆய்வு நடத்த வேண்டும் என்று கேரள அரசு கோரிக்கை விடுத்திருந்தது. வல்லுநர் குழுவினர் அதையும் நடத்தி வருகின்றனர். அவர்கள் ஆய்வு நடத்தி அறிக்கை அளித்ததும், அதுவும் தற்போதுள்ள அறிக்கையுடன் இணைக்கப்பட்டு இறுதி அறிக்கை பிப்ரவரி 26-ம் தேதிக்குப் பின்னர் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications