சங்கரன்கோவில் இடைத் தேர்தல்-21ம் தேதிதான் தெரியும் தேமுதிக நிலை!

சங்கரன்கோவில் இடைத்தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்குள் நான் முந்தி, நீ முந்தி கதையாக அதிமுகவும் பிற கட்சிகளும் களத்தில் குதித்துள்ளன. அனைவருக்கும் முன்பாக அதிமுக தனது வேட்பாளரை அறிவித்து பிரசாரத்தையும் முடுக்கி விட்டுள்ளது. அங்கு இலவசப் பொருட்களின் விநியோகம் படு ஜோராக நடந்து வருகிறது.
முதல்வர் ஜெயலலிதாவும் விரைவில் சங்கரன்கோவிலுக்குச் சென்று பிரசாரம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
திமுகவும் 17ம் தேதி வேட்பாளர் நேர்காணலுக்கு அழைப்பு விடுத்துள்ளது. அன்றே அக்கட்சி தனது வேட்பாளரை அறிவிக்கும் என்று தெரிகிறது.
மதிமுகவும் களப் பணிகளை ஏற்கனவே முடுக்கி விட்டு விட்டது. வேட்பாளர் தேர்வையும் விரைவில் அது நடத்தவுள்ளது. ஓரிரு நாட்களில் வேட்பாளரை அக்கட்சி அறிவிக்கும் என்று தெரிகிறது.
காங்கிரஸ் கட்சியின் நிலை தெரியவில்லை. இக்கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று நம்பப்படுகிறது. ஆனால் இது திமுகவை ஆதரிக்குமா அல்லது தேமுதிகவை ஆதரிக்குமா என்பதுதான் இப்போதைய முக்கியக் கேள்வியாக உள்ளது.
தேமுதிகவின் நிலைதான் பெரும் கேள்விக்குறியாக உள்ளது. திராணி இருந்தால் தனித்து நின்று பாருங்கள் என்று விஜயகாந்த் முகத்து நேராகவே சட்டசபையில் வைத்து சவால் விட்டுள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆனால் அதற்கு நேரடியாக பதிலளிக்காத விஜயகாந்த், ஆளுநர்ஆட்சியில் தேர்தல் நடந்தால் சந்திக்கத் தயார் என்று பதில் சவால் விட்டார்.
எனவே தேமுதிக இத்தேர்தலில் போட்டியிடுமா இல்லையா என்பது கேள்விக்குறியாக உள்ளது. சங்கரன்கோவில் இடைத் தேர்தல் குறித்து வாயே திறக்காமல் இருக்கிறது தேமுதிக.
இக்கட்சியின் பொதுக்குழு, செயற்குழுக் கூட்டங்கள் வருகிற 21ம் தேதி நடைபெறுகிறது. அன்றுதான் போட்டியிடுவதா அல்லது திமுகவுக்கு ஆதரவு தருவதா என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்பு பாமக செய்தது போல ஓட்டுப் போட்டு கட்சியினரின் முடிவை விஜயகாந்த் அறிவாரா என்பது தெரியவில்லை.
மொத்தத்தில் தற்போதைய நிலவரப்படி காங்கிரஸும், தேமுதிகவும் ஒன்று சேர்ந்தாற் போல அமைதி காக்கின்றன. தேமுதிகவின் நிலையை தெரிந்து கொண்டு நாம் கருத்து தெரிவிக்கலாம் என்று காங்கிரஸ் காத்திருப்பதாக தெரிகிறது.












Click it and Unblock the Notifications