ரூ.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கடத்தல்: சென்னையில் ஏர் இந்தியா அதிகாரி உட்பட 2 பேர் கைது
சென்னை: சென்னையில் இருந்து விமானம் மூலம் சிங்கப்பூருக்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலரை கடத்த முயன்றவர் கைது செய்யப்பட்டார். இதற்கு உடந்தையாக இருந்த விமான நிறுவன அதிகாரியும் கைது செய்யப்பட்டார்.
சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு அதிகளவில் அமெரிக்க டாலர்கள் கடத்தப்பட உள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு கூடுதல் தலைமை இயக்குனர் ராஜன் உத்தரவின்பேரில் அதிகாரிகள் விமான நிலையத்தை கண்காணித்தனர்.
சென்னையில் இருந்து நள்ளிரவு 12.45 மணிக்கு சிங்கப்பூருக்கு புறப்பட தயாராக இருந்த ஏர்-இந்தியா விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகளையும், அவர்களின் உடமைகளையும் சோதித்தனர். ஆனால் அமெரிக்க டாலர்கள் எதுவும் சிக்கவில்லை. இந்த நிலையில் சிங்கப்பூர் செல்ல உள்ள விமானத்தின் ஒரு இருக்கையின் அடியில் பணம் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
எனவே விமானத்தில் அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர். அதில் ஒரு இறுக்கையின் அடியில் பேப்பரில் சுற்றப்பட்ட நிலையில் இருந்த பார்சல் கிடைத்தது. அதனை திறந்து பார்த்தபோது ரூ.25 லட்சம் மதிப்புள்ள அமெரிக்க டாலர் கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக சென்னை ராயபுரத்தைச் சேர்ந்த ஷாஜகான்(42) என்பவரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருந்த பணம் தன்னுடையது தான் என்றும், அதனை சிங்கப்பூருக்கு கடத்த திட்டமிட்டதாகவும் ஷாஜகான் தெரிவித்தார்.
மேலும் ரூ.25 லட்சம் மதிப்புள்ள டாலர்கள், விமானத்திற்கு கொண்டு செல்ல ஏர்இந்தியா உணவு பராமரிப்பு சூப்பிரண்டு பிரசாத்(54) உதவியதும் விசாரணையில் தெரிய வந்தது. இதேபோல பணம் கடத்துவதற்கு பிரசாத் இதற்கு முன் 2 முறை உதவியுள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இதனையடுத்து 2 பேரையும் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
விமானத்தில் ஏற்றுவதற்கான உணவுப் பொருட்கள் கொண்டு செல்லும் வேன் மூலம் பணம் விமானத்திற்குள் கொண்டு செல்லப்பட்டு இருக்கைக்கு அடியில் வைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்றது. இது குறித்து மேலும் விசாரணை நடந்து வருகின்றது.
இதனால் சிங்கப்பூர் செல்லும் விமானம் தாமதமாக அதிகாலை 2.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.












Click it and Unblock the Notifications